பிர்மிங்காம்: உலக லெஜன்ட் சாம்பியன்ஸ் டி20 தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பிர்மிங்காமில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சாம்பியன்ஸ் சிக்ஸர் மழை பொழிந்தது.
துவக்க வீரராக இறங்கிய நமன் ஓஜா டக் அவுட் ஆன நிலையில் மற்றொரு துவக்க வீரர் ராபின் உத்தப்பா 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டத்தை ஆடியிருந்தார். அவர் ஐந்து ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார். அடுத்த மூன்றாம் வரிசையில் சுரேஷ் ரெய்னா 12 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். அவர் ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்து வந்த கேப்டன் யுவராஜ் சிங் 25 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். அவர் மூன்று ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் அடித்து இருந்தார்.

ஐந்தாம் வரிசையில் இறங்கிய குர்கீரத் சிங் கடந்த போட்டியை போலவே இந்த முறையும் அதிரடி ஆட்டம் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 42 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து மிரட்டி இருந்தார். ஆறு ஃபோர் மற்றும் ஏழு சிக்ஸ் அடித்து இருந்தார். இர்பான் பதான் 17 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து இந்தியா சாம்பியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது, டிவைன் ஸ்மித் 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஜாம்பவானான கிறிஸ் கெயில் நிதானமாக ஆடி 17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து இருந்தார். அப்போது போட்டியில் மழை குறுக்கிட்டது. 5.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்தது வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணி. அப்போது மழை பெய்ததால் டி எல் எஸ் முறைப்படி இந்தியா சாம்பியன்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்தியா சாம்பியன்ஸ் அணி.