பிர்மிங்காம்: உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணியை, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அதற்கு அடுத்த நாளே இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியை புரட்டி எடுத்து இருக்கிறது. இந்த தொடரில் இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் இமாலய ஸ்கோர்களை குவித்ததுடன், நான்கிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர்கள் மிரட்டி உள்ளனர்.
கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. சோயப் மாலிக் 33 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தார். தனது காலத்தில் உலகின் சிறந்த வெள்ளைப் பந்து ஆல் ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய அப்துல் ரசாக் 9 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். ஷான் மக்சூத் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தார்.

இதை அடுத்து 197 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது இங்கிலாந்து சாம்பியன்ஸ். அந்த அணியில் அதிகபட்சமாக ஃபில் மஸ்டர்ட் 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் அந்த அணி 17 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, யூசுப் தான் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள், ஹர்பஜன் சிங், ஆர்பி சிங், இர்ஃபான் பதான் போன்ற பந்துவீச்சாளர்கள் இருந்தும் பாகிஸ்தான் அணியை வீழ்த்த முடியவில்லை. அதேபோல ஆஸ்திரேலிய அணியாலும், பாகிஸ்தான் அணியை வீழ்த்த முடியவில்லை.
இதுவரை இந்த தொடரில் பாகிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வீரர்களான அப்துல் ரசாக், சோஹைல் தன்வீர், மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான், ஷாஹித் அப்ரிடி போன்ற வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை கலங்கடித்து வருகின்றனர்.
இதுவரை இந்த தொடரில் ஆடிய போட்டிகள் அனைத்திலும் பாகிஸ்தான் அணி 190 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற அணிகள் 190 ரன்களை எட்ட சிரமப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் அதை அசாதாரணமாக செய்து வருகிறது. அதிலும் இந்திய அணிக்கு எதிராக 243 ரன்கள் குவித்து அனைவரையும் திகைக்க வைத்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி 175 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி மிக மோசமாக செயல்பட்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி, ஜாம்பவான்களை கொண்ட பிற அணிகளை மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தொடரின் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி முதல் இடத்தில் உள்ளது. தான் ஆடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மூன்று போட்டிகளில் ஆடி அதில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.