சென்னை : உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர் குக்கேஷ்க்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனுடன் 18 வயது வீரரான தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் பலப்பரீட்சை நடத்தினார்.
14 சுற்றுகள் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் யார் ஏழரை புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்களே சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள். இதில் குகேஷ் மற்றும் டிங் லீரன் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்று கடும் போட்டி போட்டு விளையாடினர்.

இந்த நிலையில் இருவரும் தலா ஆறரை புள்ளிகள் பெற்ற நிலையில் 14 வது சுற்றுப்போட்டியில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஏழரை புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையும் குகேஷுக்கு கிடைத்தது.குகேஷ்க்கு இந்திய ரூபாய் மதிப்பில் 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
அதேபோன்று தமிழக அரசும் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்தது. இதை அடுத்து குகேஷுக்கு சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளிகள் வாழ்த்து தெரிவித்து அவருக்கு பாராட்டு நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த நிலையில் தற்போது சென்னை விமான நிலையம் திரும்பியுள்ள குகேஷ்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேளதாளம் முழங்க நூற்றுக்கணக்கான பேர் விமான நிலையத்தில் திரண்டு குக்கேஷ்க்கு வாழ்த்து பதாகைகளுடன் வரவேற்றனர். இதனை அடுத்து செய்தியாளரிடம் பேசிய குகேஷ், இப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்ததை பார்த்து தமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. செஸ் போட்டி எவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
ரசிகர்கள் கொடுத்த அன்பும் உற்சாகத்தாலும் தான் என்னால் உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல முடிந்தது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். உலக சாம்பியனாக சென்னை வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது என்று குகேஷ் கூறினார்.
இதனை அடுத்து செஸ் வடிவில் அமைக்கப்பட்டுள்ள காரில் குகேஷ் புறப்பட்டு சென்றார். குகேஷ் இன்று மாலை அவருடைய பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பாக குகேஷுக்கு நாளை பாராட்டு விழா நடத்தப்படுகிறது.இதில் 5 கோடி ரூபாய் காண பரிசுத்தொகை வழங்கப்படும்.