உலகக் கோப்பை இறுதிப் போட்டி-இலங்கையுடன் இன்று இந்தியா மோதல்
மும்பை: 121 கோடி இந்தியர்களின் ஒரே கனவான உலகக் கோப்பையை வெல்லும் வேகத்துடன் இலங்கை அணியை இன்று மும்பை வாங்கடே மைதானத்தில் இந்தியா சந்திக்கிறது.

இந்த உலகக் கோப்பையின் ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் கடுமையாகவே சந்தித்துக் கடந்துள்ளோம். இது கேப்டன் டோணி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் கூறிய வார்த்தை. உண்மைதான், ஒவ்வொரு போட்டியையும் இந்தியா எளிதாக முடிக்கவில்லை. சற்று போராடித்தான் முடித்து வந்துள்ளது.
தற்போது ஒட்டுமொத்த பிரஷரையும் தாங்கியபடி டோணியும், அவரது வீரர்களும் வாங்கடேவில் முக்கியப் போட்டியில் இலங்கையை சந்திக்கவுள்ளனர். இதில் இந்தியா வென்றால், அது இந்தியாவுக்கு 2வது உலகக்கோப்பையாகும். மாறாக, இலங்கை வென்றால், அந்த அணிக்கும் இது 2வது உலகக் கோப்பையாக மாறும். எனவே எந்த அணி வென்றாலும் அந்த நாட்டுக்கு அது இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது இந்தியாவால். உள்ளூரில் நடைபெறும் போட்டி, 2வது உலகக் கோப்பையை வென்றாக வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்புகள், சச்சினுக்காக பரிசளிக்க வேண்டிய கட்டாயம் என ஏகப்பட்ட நெருக்கடியில் உள்ளது இந்தியா. இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது இருந்ததை விட தற்போது குறைவான நெருக்கடியுடன்தான் இந்தியா இருக்கிறது என்பதால், போட்டியை சற்று ரிலாக்ஸ்டாகவே இந்தியா சந்திக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை இது 2வது இறுதிப் போட்டி என்று கூறலாம். பாகிஸ்தானுடன் நடந்த போட்டியை அரையிறுதி என்பதை விட முதல் இறுதிப் போட்டி என்றே கூற வேண்டும். அப்படி ஒரு பவர்புல் நெருக்கடியில் அப்போது இந்தியா இருந்தது. தற்போது 2வது இறுதிப் போட்டியை சந்திக்கிறது இந்தியா.
இந்திய அணியில் சச்சின், ஷேவாக், யுவராஜ் சிங் என நட்சத்திர வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சிலும் இந்தியா தற்போது வலுவாகவே உள்ளது.
கேப்டன் டோணி இதுவரை சரிவர ஆடவில்லை. அவர் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். அதேபோல சுரேஷ் ரெய்னாவும் பொறிந்து தள்ள வேண்டும். அதுவும் மிகமிக முக்கியம்.
இலங்கை அணியில் திலகரத்னே தில்ஷன், கேப்டன் குமார சங்கக்காரா, மஹேளா ஜெயவர்த்தனே ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். பந்து வீச்சில் மலிங்கா மிரட்டுகிறார். முரளிதரனும் இருக்கிறார். மெண்டிஸ், ரங்கண ஹெராத் ஆகியோரும் முக்கியமானவர்கள்தான்.
ஆசியாவின் இரு பெரும் கிரிக்கெட் சக்திகளான இந்தியாவும், இலங்கையும் மோதுவது பெரும் சுவாரஸ்யத்தைக் கிளப்பியுள்ளது. இரு அணிகளிலும் சிறப்பான வீரர்கள் உள்ளனர். எனவே எந்த அணி வெல்லும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் இன்றைய இறுதிப் போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டி விட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
உலக கோப்பை கிரிக்கெட்:படங்கள் India vs Srilanka
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications