சங்ககாரா காலில் விழுந்து வேண்டுமானாலும் கெஞ்ச தயார்... இலங்கை கேப்டன் மேத்யூஸ் உருக்கம்!
சிட்னி: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டாம் என்று சங்ககாரா முன் மண்டியிட்டு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என்று இலங்கை அணி கேப்டன் ஆங்லோ மேத்யூஸ் கூறினார்.
ஸ்காட்லாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் இலங்கையின் சங்ககாரா 124 ரன்களை குவித்தார். இந்த சதத்தின் உதவியுடன், இலங்கை 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியது.

தொடர்ந்து சதங்கள்
சங்ககாரா வங்கதேசத்துக்கு எதிராக 105 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 117 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 104 ரன்களும் குவித்த நிலையில், ஸ்காட்லாந்துக்கு எதிராக அவர் அடித்த சதம், தொடர்ச்சியாக விளாசப்பட்ட 4வது செஞ்சுரியாகும். இதுவரை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோல யாரும் 4 செஞ்சுரிகளை தொடர்ச்சியாக அடித்தது கிடையாது.

உலக கோப்பையில் டாப்
நடப்பு உலக கோப்பையில் அதிக ரன் குவித்தோர் பட்டியலிலும் சங்ககாரா முதலிடத்திலுள்ளார். அவர், 6 போட்டிகள் மூலம் 496 ரன்கள் குவித்துள்ளார். ஆனால், நடப்பு உலக கோப்பை போட்டிகளுக்கு பிறகு சங்ககாரா கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனால், அந்த நாட்டு ரசிகர்கள் சோகத்திலுள்ளனர்.

மண்டியிட தயார்
இந்நிலையில் நிருபர்களை சந்தித்த, இலங்கை கேப்டன் மேத்யூஸ். அவர் கூறியதாவது: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டாம் என்று, நான் சங்ககாரா முன்பு மண்டியிட்டு வேண்டுமானாலும் கெஞ்ச தயாராக உள்ளேன்.

குறுக்கிட மாட்டேன்
அதேநேரம், சங்ககாரா எடுக்கும் முடிவுக்கு குறுக்கே நிற்கப்போவதில்லை. ஏனெனில், இத்தனை ஆண்டுகாலமாக இந்த நாட்டுக்காக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

வயசானாலும், இளமை குறையலை..
தில்ஷன் மற்றும் சங்ககாரா இருவருமே வயசாகும்போதுதான் மேலும் சிறப்பாக ஆடுகின்றனர். இவ்வாறு மேத்யூஸ் கூறினார். இலங்கை தனது பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் மேலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் மேத்யூஸ் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications