சிட்னி: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் 20 நிமிடங்களில் விற்று தீந்துவிட்டன.
11-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. 'பி' பிரிவில் இடம் பிடித்து இருக்கும் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அடிலெய்டு நகரில் 15-ந் தேதியன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

உலக கோப்பை போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதிய 1992, 1996, 1999, 2003, 2011 ஆகிய 5 ஆண்டுகளிலும் இந்தியா வெற்றிபெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி இருநாட்டை சேர்ந்த ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் கொண்டுள்ளது.
இரு அணிகள் இடையில் நடைபெறும் லீக் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை எந்த ஒரு போட்டிக்கும் இல்லாத வகையில் வெறும் 20 நிமிடங்களிலே விற்று தீர்ந்தது. மற்ற அணிகள் இடையிலான போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இரண்டு, மூன்று நாட்கள் என இழுக்கும் நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியின் டிக்கெட் விற்பனை இவ்வளவு விறுவிறுப்பாக விற்றதை பார்க்கும் போதே ரசிகர்களின் ஆர்வம் எப்படி இருக்கும் என்று தெரியும்.
1992-ம் ஆண்டும் பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியை வென்றாலும், இதுவரையில் இரண்டு முறை உலககோப்பையை வென்றுள்ள இந்தியாவை வெற்றி கொள்ளவில்லை.
உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி அடிலெய்டில் நடைபெறும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. 8-ந் தேதி ஆஸ்திரேலியாவையும், 10-ந் தேதி ஆப்கானிஸ்தானையும் இந்தியா எதிர்கொள்கிறது.