அடிலெய்ட்: இந்தியா பாகிஸ்தான் லீக் ஆட்டத்தைக் காண 20 ஆயிரம் இந்திய ரசிகர்கள் டிக்கெட் வாங்கிக் குவிந்துள்ளதால் மைதானம் முழுவதும் இந்தியர்களின் தலையாக உள்ளது. இதனால் போட்டி இந்தியாவில் நடப்பது போன்ற சூழல் காணப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி இன்று அடிலைட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடி வருகின்றனர்.
உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு இணையாக கருதப்படும் இந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் வெறும் 20 நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டது. உலகம் முழுவதும் அதிகமானோர் பார்க்கும் கிரிக்கெட் மோதலாகவும் இது மாறியுள்ளது.
50 ஆயிரம் இருக்கை வசதி கொண்டது இந்த மைதானம். எனவே, இந்த ஆட்டத்தை நேரில் பார்க்கும் ஆவலில் சுமார் 20 ஆயிரம் இந்திய ரசிகர்கள் டிக்கெட் வாங்கி சென்றுள்ளனர். இதனால் மைதானத்தின் பாதிப் பகுதியில் இந்தியர்களாக உள்ளனர். அவர்களின் ஆவலுக்கு ஏற்ப இந்திய வீரர்களும் அதிரடியாக ஆடி பாகிஸ்தானை நையப்புடைத்து வருகின்றனர்.
இந்தியர்களின் ஆரவார கோஷம் காரணமாக போட்டி இந்தியாவில் நடக்கிறதோ என்று எண்ணும் வகையில் அடிலைடே ஆர்ப்பரித்துக் காணப்படுகிறது இந்தியர்களின் குவியலால்.