டெல்லி: உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிகாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மோடியும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மெல்போர்னில் நடைபெற்ற இன்றைய லீக் போட்டியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 307 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆப்ரிக்க அணியை 177 ரன்களுக்குள் சுருட்டியதோடு 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை, முதன்முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது, உலக கோப்பை தொடரில் இந்தியாவிற்கு இரண்டாவது வெற்றியாகும்.
இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில்
பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துச் செய்தியில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.