கான்பெரா: குட்டி அணிகளாக இருந்தாலும், சுட்டி அணிகளாக அறியப்படும் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நாளை பலப் பரிட்சை நடத்த உள்ளன.
ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவிலுள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடரில் குட்டி அணிகள்தான் சக்கைபோடு போடுகின்றன என்பதால், இவ்விரு குட்டி அணிகள் போட்டியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

உலக கோப்பையின் ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ள, இவ்விரு தெற்காசிய அணிகளும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் சந்தித்துள்ளன. அதில் வங்கதேசத்துக்கு அதிர்ச்சியளித்து ஆப்கானிஸ்தான் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியது. எனவே நாளைய போட்டியும் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஆன்டி மோல்ஸ் கூறுகையில், "எங்கள் குரூப்பிலுள்ள வங்கதேசத்தையும், ஸ்காட்லாந்தையும் எளிதாக வீழ்த்திவிடுவோம். அனைவருக்கும் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது, ஆப்கானிஸ்தான் பெற்ற வெற்றியும் அந்த அணி வீரர்களுக்கு வலு சேர்க்கும்.
மறுபக்கம் வங்கதேசமும் முழு நம்பிக்கையோடுதான் உள்ளது. உலகின் பல முன்னணி கிரிக்கெட் அணிகளுக்கு ஷாக் கொடுத்து வெற்றி பெற்றுவரும் அணியான வங்கதேசம், தங்களுக்கு ஆப்கான் ஷாக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. எனவே நாளைய போட்டியில் அனல் பறக்கும்.