அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 213 ரன்கள் எடுத்த நிலையில், 16 ஓவர்கள் எஞ்சியிருக்கும்போதே, வெற்றி இலக்கை எட்டி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மார்ச் 26ம் தேதி நடைபெறும் அரையிறுதியில், இந்தியா-ஆஸ்திரேலியா பலப் பரிட்சை நடத்த உள்ளன.
உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இன்று நடைபெற்ற 3வது கால்இறுதியில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், 1992ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தானும் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இருப்பினும் சொதப்பலாகவே பேட்டிங்கை ஆரம்பித்தது பாகிஸ்தான். தொடக்க வீரர்கள் அகமது செஷாத் 5 ரன்களிலும், சர்பாஸ் அகமது 10 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.
ஹரீஸ் சொகைல் மற்றும் கேப்டன் மிஸ்பா உல் ஹக் இணைந்து அணியை மீட்க நடத்திய போராட்டமும் பெரிய வெற்றியை பெறவில்லை. இருவருமே முறையே 41 ரன்கள் மற்றும் 34 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர்.
அடுத்தடுத்த வீரர்களும் 10, 20 என ரன்கள் எடுத்து அவுட் ஆகி, சோபிக்க தவறவே, 49.5 ஓவர்களில் பாகிஸ்தான் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸி. தரப்பில் ஹசில்வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பாகிஸ்தான் பேட்டிங் வீக்காக இருந்தாலும், வேகப்பந்து வீச்சில் பலமாக உள்ளது. எனவே அதைக் கொண்டு ஆஸ்திரேலியாவை சாய்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கேற்ப ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை பாக். பவுலர்கள் மிரட்டவே செய்தனர்.
தொடக்க வீர் ஆரோன் பின்ச் 2 ரன்களில் சொகைல் கான் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆக, அதிரடி வீரர் டேவிட் வார்னரும் வகாப் ரியாஸ் பந்தில் ரகத் அலியிடம் கேட்ச் கொடுத்து 24 ரன்களில் நடையை கட்டினார்.
கேப்டன் மைக்கேல் கிளார்க்கும், வகாப் ரியாசின் அதிரடி பவுன்சரில் சிக்கி சோயிப் மசூதிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் அவுட் ஆனார். அப்போது 11 ஓவர்களில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்களை மட்டுமே எடுத்திருந்ததால், பாகிஸ்தான் பக்கம் கை ஓங்கியது. ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இருப்பினும், வாட்சனும், ஸ்டீவ் ஸ்மித்தும் அணியை சரிவில் இருந்து மெல்ல, மெல்ல மீட்டனர். நடுவே, வாட்சன் அளித்த சிம்பிள் கேட்சை பவுண்டரி எல்லையில் ரகத் அலி மிஸ் செய்து ஆஸி.யை நிம்மதி பெருமூச்சு விடச் செய்தார். கிடைத்த அதிருஷ்டத்தை பயன்படுத்திக் கொண்ட வாட்சன் அதிரடியாக ஆடி அரை சதம் விளாசினார்.
இருப்பினும் 27 ஓவர்களில், ஸ்கோர் 148 ரன்களாக உயர்ந்தபோது ஸ்டீவ் ஸ்மித், 65 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் அதன்பிறகு களமிறங்கிய, அதிரடி வீரர் மேக்ஸ்வெல், வாட்சனுடன் இணைந்து, மேற்கொண்டு விக்கெட் வீழாமல் பார்த்துக் கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் 29 பந்துகளில் அதிரடியாக 44 ரன்களை குவித்தார். இதனால் 33.5வது ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. சிறப்பாக பந்து வீசிய ஹசில்வுட்டுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
எனவே மார்ச் 26ம்தேதி நடைபெறும் 2வது செமி பைனலில், இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.