பெங்களூர் : 2019 உலகக்கோப்பை தொடரில் எந்த அணிகள் சிறப்பாக செயல்படும் என முன்னாள் வீரர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
அந்த வரிசையில், அனில் கும்ப்ளே ஒரு அணியைக் குறிப்பிட்டு, அந்த அணிக்கு எப்படி வெற்றி பெறும் அணியாக இருக்க வேண்டும் என தெரியும். அதனால், எப்படியும் அந்த அணி அரையிறுதி செல்லும் எனக் கூறினார்.
அவர் சொல்வது ஆஸ்திரேலியா அணியைத்தான். அவர் கூறுகையில், உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா எப்போதும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அவர்களுக்கு இங்கிலாந்து சூழ்நிலை நன்றாக தெரியும். முழு வீச்சில் செயல்படும் திறனும் உள்ளது என்றார்.
இந்தியாவுக்கு உலகக்கோப்பையா? வாய்ப்பில்ல ராஜா.. அதுல நிறைய பிரச்சனை இருக்கு!!
மேலும், வெற்றிகரமான அணியாக இருப்பது எப்படி என்பது ஆஸ்திரேலியாவுக்குத் தெரியும். அது உலகக்கோப்பை தொடரில் மிகவும் முக்கியம். அவர்கள் நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள் என்றார்.
ஆஸ்திரேலியா அணி ஓராண்டு தடையில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாமல் பல மாதங்கள் சிரமப்பட்டது. எனினும், அவர்கள் இல்லாமலேயே இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் 3-2 என வீழ்த்தியது. அடுத்து பாகிஸ்தான் அணியை 5-0 என வீழ்த்தி பெரும் நம்பிக்கை பெற்றது.
இதனிடையே, ஐபிஎல் தொடருக்குப் பின் ஸ்மித், வார்னர் தங்கள் தடைக் காலம் முடிவடைந்து ஆஸ்திரேலிய அணியில் இணைந்து அணிக்கு மேலும் பலம் சேர்த்துள்ளனர். அதனால், ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை, இந்த முறையும் வெல்ல வாய்ப்புள்ளது. அதைத்தான் அனில் கும்ப்ளேவும் கூறியுள்ளார்.