மான்செஸ்டர் : இந்தியா - பாகிஸ்தான் ஆடவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட்கள் 48 மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்துள்ளது. இந்தப் போட்டி ஜூன் 16 அன்று நடைபெற உள்ளது.
2019 உலகக்கோப்பை தொடர் மே மாதம் 30ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான ஆயத்தங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் இறங்கியுள்ளன.
இந்த உலகக்கோப்பை தொடரின் பலத்த எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியாக இந்தியா - பாகிஸ்தான் மோதல் கருதப்படுகிறது. டிக்கெட் விற்பனையில், மற்ற எந்த போட்டிகளையும் விட இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மான்செஸ்டர் நகரில் இந்தியா - இங்கிலாந்து மோதிய டி20 போட்டி நடைபெற்றது. அப்போது, அந்த மைதானம் முழுவதும் இந்தியர்களே அதிகமாக காணப்பட்டனர். அதை விட அதிக அளவில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு இந்தியர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு சுமார் நான்கு லட்சம் ரசிகர்கள் இணையத்தில் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்ததாகவும், அதில் 70 சதவீதம் இந்தியர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. பின்னர், டிக்கெட் விற்பனை துவங்கிய 48 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துள்ளது.
இதையடுத்து, "இந்தியா - பாகிஸ்தான் போட்டின்னா சும்மாவா" என மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் ரசிகர்கள் பேசத் துவங்கி உள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இங்கிலாந்து மண்ணில் மோதிய சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. அதற்கு பழி தீர்க்கும் வகையில், இந்த முறை இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் இடையே நிலவி வருகிறது.