மும்பை: 2019 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள்ளது. தொடர்ந்து, உலகக்கோப்பை தொடர் மே இறுதியில் துவங்க உள்ளது.
இந்நிலையில், பலரும் உலகக்கோப்பை தொடரில் எந்த அணி சிறப்பாக செயல்படும் என்பது குறித்து தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய கேப்டன் கபில் தேவ் தன் கணிப்புக்களை வெளியிட்டுள்ளார்.
கபில் தேவ் கூறுகையில், இந்திய அணியில் இளமையும், அனுபவமும் கலந்து இருக்கிறது. பல அணிகளை விட அதிக அனுபவம் உள்ளது. நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள், மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள், அப்புறம் தோனி, கோலி இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒப்பிட முடியாத வீரர்கள் என குறிப்பிட்டார்.
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு எந்த நான்கு அணிகள் செல்லும் என்பது குறித்து பேசும் போது, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும். நியூசிலாந்து அல்லது வெஸ்ட் இண்டீஸ் ஆச்சரியம் அளிக்கலாம் எனக் கூறினார்.
இந்தியா அரையிறுதி வரை முன்னேறும் எனக் கூறிய கபில் தேவ், அதன் பின் அதிர்ஷ்டம், தனிப்பட்ட மற்றும் அணி செயல்பாடுகள் தான் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு வழிநடத்திச் செல்லும் எனக் கூறினார்.
அம்பானி டீம்னா சும்மாவா.. காயம்பட்ட வீரருக்கு செம கவனிப்பு.. கை கொடுக்கும் மும்பை இந்தியன்ஸ்!!
ஒருவேளை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்த இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் தேவை என்கிறாரோ கபில் தேவ்!
இந்திய அணி சமநிலையுடன் உள்ளது எனக் கூறுகிறார் கபில் தேவ். ஆனால், இந்திய அணியில் இன்னும் நான்காவது இடத்தில் எந்த பேட்ஸ்மேன் களமிறங்குவார். ராகுல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் அணியில் களமிறங்குவார்களா.. அல்லது வெளியில் இருப்பார்களா? என பல கேள்விகளுக்கு விடை இல்லை. குல்தீப் யாதவ், விஜய் ஷங்கர், ஐபிஎல் தொடரில் சரியாக செயல்படவில்லை. உலகக்கோப்பை அணியில் அவர்கள் நிலை என்ன என்பதும் தெரியவில்லை.