லண்டன் : வலைப் பயிற்சியின் போது காயமடைந்த விஜய் ஷங்கருக்கு, எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.
2019 உலகக்கோப்பை தொடருக்கான பயற்சிப் போட்டிகளில் இந்திய அணி ஆடி வருகிறது. முதல் பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஆடவிருந்த நிலையில், வலைப் பயிற்சியின் போது, கலீல் அஹ்மது வீசிய பந்தில் காயமடைந்தார் விஜய் ஷங்கர்.

உடனடியாக பயிற்சியில் இருந்து விலகினார் விஜய் ஷங்கர். இதனால், அவரது உலகக்கோப்பை வாய்ப்பு பறிபோகுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதில் எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை அடுத்து, காயமடைந்த வலது கையை, பயன்படுத்தாமல், இடது கையை மட்டும் வைத்து பேட்டிங் பயிற்சி செய்தார் விஜய். அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிசிசிஐ, மருத்துவ குழுவின் உதவியுடன் அவர் தேறி வருவதாக கூறியுள்ளது.
இதனால், உலகக்கோப்பை தொடரில் விஜய் ஷங்கர் தொடர்ந்து பங்கேற்பார் என ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முதல் பயிற்சிப் போட்டியில் விஜய் ஷங்கர் ஆடவில்லை.
இரண்டாம் பயற்சிப் போட்டு வரும் மே 28 அன்று நடைபெற உள்ளது. அதற்குள் அவர் தேறி விடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.