இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உலகக்கோப்பை முடிந்த உடன் தற்போதைய தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் மற்றும் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், இருவரையும் "கழட்டி"விட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பைக்கு முன்னதாக பத்து போட்டிகளில் தோல்வி அடைந்து மிக மோசமாக காட்சி அளிக்கிறது.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது, பாகிஸ்தான் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், உலகக்கோப்பை வெல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் இந்திய அணியை உலகக்கோப்பை தொடரில் வீழ்த்த வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் அணி செயல்பட்டு வருகிறது.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி செல்லாது என்ற முடிவுக்கே பலரும் வந்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி மற்றும் சில முக்கிய அதிகாரிகள், பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகக்கோப்பை தொடருடன் இருவருக்கும் ஒப்பந்தம் முடியும் நிலையில், அவர்கள் இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது. இதற்கிடையே மிக்கி ஆர்தர் தான் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருக்க விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ICC World Cup 2019: இந்த 4 அணிகளில் ஒரு அணிக்கு உலக கோப்பை.. எப்படி..? ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்
அதே போல, இன்சமாமை பயிற்சியாளராக நியமிக்க திரைமறைவு வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இருவரையும் கழட்டி விட்டு, வேறு முன்னாள் பாகிஸ்தான் வீரர்களை அவர்களின் பதவிகளுக்கு நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஆமிர் சோஹைல் தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.