மும்பை : இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா விரைவில் ஆட்டமிழந்து விடுவார் என கணித்து இருக்கிறார் பிரபல ஜோதிடர் சுமித் பஜாஜ்.
2023 உலகக்கோப்பை தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள நிலையில் அந்தப் போட்டியில் என்ன நடக்கும் என பல விஷயங்களை கணித்து இருக்கிறார் சுமித் பஜாஜ்.
குறிப்பாக, முதலில் பேட்டிங் செய்யப் போவது யார்? எத்தனை ரன்கள் அடிக்கப்படும்? என அவர் கணித்து கூறி இருக்கிறார்.

அவரது கணிப்புப்படி இந்தியா முதலில் பந்து வீசும். அதன் பின் சேஸிங் செய்யும். அதுவும் 47 - 48 வது ஓவரில் சேஸிங்கில் இந்தியா வெற்றி பெறும். நியூசிலாந்து அணி 250 முதல் 270 ரன்கள் வரை இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயம் செய்யும் என அந்த ஜோதிடர் கூறி இருக்கிறார்.
நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கிறார். 2023 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 9 போட்டிகளில் 565 ரன்கள் குவித்துள்ளார். மூன்று சதம், இரண்டு அரைசதம் அடித்துள்ளார். அவர் அரை இறுதியில் பெரிய அளவில் ரன் குவித்தால் இந்திய அணிக்கு தலைவலியாக மாறும்.
இந்த நிலையில், ரச்சின் ரவீந்திரா குறித்து கணித்த அந்த ஜோதிடர், நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை மிட்செல் சான்ட்னர், டெவான் கான்வே ஆகியோரை நாம் கவனமாக பார்க்க வேண்டும். ரச்சின் அரை இறுதியில் சரியாக ஆட மாட்டார். அவர் விரைவில் தன் விக்கெட்டை பறி கொடுத்து விடுவார் என்றார்.
மேலும், இந்தப் போட்டி இந்திய அணிக்கு எளிதாக இருக்காது. நியூசிலாந்து அணி சில சவால்களை இந்திய அணிக்கு அளிக்கும். இந்தப் போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, சுப்மன் கில், ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக ஆடுவார்கள். சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் முக்கிய பங்காற்றுவார் எனவும் அந்த ஜோதிடர் கணித்து இருக்கிறார்.