கவுகாத்தி: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பந்துவீச்சாளர்கள் அனைவரும் வெயிலில் பந்துவீசி சோர்வடைய கூடாது என்பதற்காக இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் 15 வீரர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர். அதேபோல் இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தவிர்த்து 13 வீரர்களும் பயிற்சி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதன்பின் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. நீண்ட நேரம் காத்திருந்த நடுவர்கள், பின்னர் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதனால் பயிற்சி ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. ஏற்கனவே திருவந்தபுரத்தில் நடக்கவிருந்த தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

தற்போது இந்தியா - இங்கிலாந்து போட்டி கைவிடப்பட்டுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து இடையிலான ஆட்டத்திலும் இதுவரை டாஸ் கூட போடவில்லை. உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் உலகக்கோப்பை தொடரிலும் மழை முக்கிய பங்கு வகிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவில் கனமழை பெய்யும். ஆசிய கோப்பையை எப்படி இலங்கை நடத்த திட்டமிட்டது தவறோ, அதேபோல் உலகக்கோப்பையை இந்த இரு மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிட்டதும் தவறு என்று விமர்சிக்கப்படுகிறது.