வீரர்கள் கெட்ட வார்த்தையால் திட்டுகிறார்கள்.. பாக். ஃபீல்டிங் பயிற்சியாளர் லுடென் திடீர் ராஜினாமா
கராச்சி: கெட்ட வார்த்தைகளால் சீனியர் வீரர்களை தன்னை திட்டுவதால், ராஜினாமா செய்யப்போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் கிரான்ட் லுடென் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருந்த நிலையிலும் பிரச்சினை தீராததால், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. 2007 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் தோற்ற நிலையில்தான், அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமாக உயிரிழந்தார்.
நடப்பு உலக கோப்பை தொடரில் ஆடுவதற்கு, ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள பாகிஸ்தான் வீரர்களும் சரியான நேரத்திற்கு ஹோட்டலுக்கு திரும்பவில்லை என்பதற்காக அபராதத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

கோட்டைவிட்ட பாகிஸ்தான்
பாகிஸ்தான் தனது முதல் லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பரிதாபமாக தோற்றது. இந்த தோல்வி பாகிஸ்தான் வீரர்களை பாதித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்களின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்தது. விக்கெட் கீப்பராக பொறுப்பேற்ற பேட்ஸ்மேன் உமர் அக்மல் பல கேட்சுகளை விட்டார்.

பயிற்சியாளர் மீது கோபம்
இந்தியாவுடனான போட்டியில் ஃபீல்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்கள் தங்கள் கோபத்தை ஃபீல்டிங் பயிற்சியாளர் கிராண்ட் லுடென் மீது காண்பிக்க தொடங்கியுள்ளனர். பயிற்சிக்கு சரியாக ஒத்துழைப்பு தராமல் அவரை அவமானப்படுத்தி வருகின்றனராம்.

மூத்த வீரர்களை சமாளிக்க முடியவில்லை
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பயிற்சியாளர் லுடென் இதுபற்றி புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் "மூத்த வீரர்கள் அவமானப்படுத்துவதை பொறுத்துக் கொண்டு, பணியில் இருக்க முடிாயது. நான் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்" என்று கூறியிருந்தார்.

கெட்ட வார்த்தையில் திட்டுறாங்க
செவ்வாய்க்கிழமை நடந்த பயிற்சியின்போது மூத்த வீரர்கள் அப்ரிடி, உமர் அக்மல், அகமது ஷெசாட் ஆகியோர் என்னை ஆட்சேபிக்கத்தக்க வார்த்தைகளால் திட்டினர். பயிற்சிக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் லுடென் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

சரி செய்வதாக உத்தரவாதம்
இதையடுத்து கிரிக்கெட் வாரிய தலைவர் ஷக்ரியார் கான், அணியின் மேலாளர் நவீத் சீமா, தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோருடன் விவரம் கேட்டறிந்துள்ளார். மேலும், லுடனையும் தொடர்பு கொண்டு, இப்பிரச்சினையை சரி செய்வதாக உறுதியளித்துள்ளாராம்.

ராஜினாமா
ஆயினும் லுடெனுக்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே, தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் அளித்துள்ளார் லுடென். உலக கோப்பை தொடரின் பாதியிலேயே பாகிஸ்தான் பயிற்சியாளர் வெளியேறியது அந்த அணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications