போட்டோ ப்ளீஸ்.. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆசையை நிராகரித்த டோணி குழு
பெர்த்: உலகக்கோப்பையை இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் பிராத்தனையாக இருக்கிறது. கிரிக்கெட் வீரர்களை தங்களின் ஹீரோக்களாகவும், சிலர் கடவுளாகவும் கூட வணங்கி வருகின்றனர்.
ரசிகர்கள் தரும் உற்சாகம்தான் தங்களின் வெற்றிக்குக் காரணம் என்பதை சில சமயங்களில் கிரிக்கெட் வீரர்கள் மறந்து விடுகின்றனர்.
பல ஆயிரம் செலவு செய்து இந்தியாவில் இருந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காணச் சென்றுள்ள ரசிகர்களுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளக் கூட நமது வீரர்கள் மறுத்துவிடுவதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்திய அணி தன்னை எதிர்த்து ஆடிய பாகிஸ்தானை கடந்த 15ஆம் தேதி பந்தாடியது.
அதேபோல கடந்த 22ஆம் தேதி மெல்பர்ன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை சூறையாடியது.
இந்த இரண்டு வெற்றிகளையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி தீர்த்தனர்.
மெல்பர்ன் நகரில் மைதானத்தில் இந்திய ரசிகர்கள் கூட்டம்தான் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு முறையும் பந்து வீசும்போதும், பேட் சுழற்றும் போதும் ரசிகர்கள் அளித்த உற்சாக கூக்குரலுக்கு அளவே இல்லை. இதை தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கூட ஒத்துக்கொண்டுள்ளனர்.
இதே வேகமும், உற்சாகமும் சனிக்கிழமையன்று நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை. காரணம் இந்திய அணி வீரர்கள், அங்கு குவிந்துள்ள ரசிகர்களை புறக்கணிப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பெர்த் நகரில்
இந்தியா, ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதும் ஆட்டம் வரும் 28ம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது. இதையொட்டி இந்திய அணி திங்கட்கிழமை பெர்த் வந்தது.

பயிற்சியில் வீர்ர்கள்
வீரர்களின் பயிற்சியை கண்டு உற்சாகமடைந்த ரசிகர்கள் அவர்களுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மணிக்கணக்கில் காத்திருந்தனர். ஆனால் டோணி தலைமையிலான வீரர்கள் ரசிகர்களை கண்டுகொள்ளவேயில்லையாம்.

மனம் நொந்த ரசிகர்கள்
இதனால் மனம் நொந்த ரசிகர்கள், நமது அணி வீரர்கள், எங்களின் சாதாரண கோரிக்கையைக் கூட ஏற்க மறுத்துவிட்டனர் என்று புலம்பி வருகின்றனர்.

கோரிக்கை மறுப்பு
பத்து முதல் 15 பேர்வரை காத்திருந்தும் எங்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். ஆனாலும் இன்னும் இருதினங்கள் இருப்பதால் போட்டி தொடங்கும்முன்னர் போட்டோ எடுத்துவிடுவோம் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications