ஜூலை 14ம் தேதி என் கையில் உலக கோப்பை இருக்கும்..!! அடித்து சொல்லும் இந்திய அதிரடி வீரர்
நாட்டிங்காம்: ஜூலை 14ம் தேதி உலக கோப்பை எனது கைகளில் இருக்கும் என்று இந்திய அணியின் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா கூறி இருக்கிறார்.
இங்கிலாந்து உலக கோப்பை தொடரில், அனைவராலும் கவனிக்கத்தக்க வீரராக இருப்பவர் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா. சிறந்த ஆல் ரவுண்டர், அதிரடி வீரர் என்ற பெயர் பெற்றவர். இந்திய அணி வீரர்களும் மட்டுமல்ல.. பல அணிகளின் ஜாம்பவான்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.
லீக் போட்டியில் ஆஸி.க்கு எதிரான இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. நாட்டிங்ஹாமில் நடக்கும் உலக கோப்பை தொடரின் 18வது போட்டியில் இத்தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியா, நியூசிலாந்து அணிகள் களம் காண்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

பயிற்சியில் தீவிரம்
இந்நிலையில் உலக கோப்பை தொடரில் சாதிப்பதற்காகவே 2, 3 ஆண்டுகளாக தீவிரமாக தயாரானதாக இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்து உள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கிரிக்கெட் தான் வாழ்க்கை
இந்திய அணிக்காக விளையாடுவது தான் என் வாழ்வே. அது தான் எனது வாழ்க்கை. விளையாட்டை அதிகம் நேசித்து விளையாடுகிறேன். சவால் என்றால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். உலக கோப்பை தொடரில் இந்திய அணி சார்பில் விளையாட வேண்டும் என்பதற்காகவே 2,3 ஆண்டுகளாகவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன்.

அதுவே கனவு
அணியில் என்னுடன் விளையாடுபவர்கள் அனைவருமே எனது சகோதரர்கள். உலக கோப்பை 2019 தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவது என்பது எனது லட்சிய கனவு. தற்போது அந்த காலகட்டம் எனக்கு வந்துவிட்டது. இது சாதிக்கும் நேரம்.

ஜூலை 14ல் கோப்பை
ஜூலை 14ம் தேதி உலக கோப்பை கண்டிப்பாக என் கையில் இருக்கும். எனது குறிக்கோள், நோக்கம், ஆசை, சிந்தனை எல்லாம் உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுப்பது தான். 120 கோடி இந்திய மக்களின் எதிர்பார்ப்பும் அது தான் என்றார்.


Click it and Unblock the Notifications