சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் மோத உள்ள, சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பால், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க, ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்பின் ஜாம்பவான் ஷேன் வார்னே உதவியை நாடியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்.
ரவிச்சந்திரன் அஸ்வின் சிட்னி பிட்சில் அச்சுறுத்தலாகத் திகழலாம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் கூறியதையடுத்து ஆஸ்திரேலிய கூடாரத்தில் கலக்கம் தொற்றிக் கொண்டுள்ளது. கடந்த வாரம் இதே மைதானத்தில் நடந்த போட்டியில், சுழற்பந்தை எளிதாக சந்திக்கும் இலங்கை, தென் ஆப்பிரிக்க சுழலில் மூழ்கியதும், ஆஸ்திரேலியாவுக்கு நடுக்கத்தை கொடுத்துள்ளது.

எனவே, ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஷேன் வார்னேவை உதவிக்கு அழைத்துள்ளார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஷேன் வார்ன், சிறிது நேரம் கழித்து தனது லெக் ஸ்பின், கூக்ளிகளை வீசத் தொடங்கினார். பல பேட்ஸ்மென்களுக்கு அதனை சரியாக ஆட முடியவில்லை.
வலைப்பயிற்சி முடிந்த பிறகு ஷேன் வார்ன், கிளார்க் ஆகியோரிடையே நீண்ட உரையாடல் நடந்துள்ளது. கிளார்க் வலையில் பேட் செய்த போது நடுவரின் நிலையிலிருந்து ஷேன் வார்னே அவரது பேட்டிங்கை பார்வையிட்டார். அதன் பிறகு கிளார்க் பேட் செய்ய வார்னே வீசினார். ஆஃப் ஸ்பின் போன்ற சில கூக்ளிக்களை அவர் வீசினார்.
இதற்கிடையே வலைப்பயிற்சியை பார்வையிட வந்த இந்திய ரசிகர்கள், ஷேன் வார்னேவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினராம். இதனால் கிளார்க் கடுப்பாகியதாகவும் சிட்னியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.