துபை: இந்திய அணியே மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் என்று இந்தியாவின் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
அடுத்த உலகக் கோப்பைக்கு இன்னும் 500 நாட்கள் உள்ளன. இப்போதே அதுகுறித்த பேச்சுகள் ஆரம்பித்துவிட்டன.
ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்ட சச்சின் டெண்டுல்கர், அடுத்த உலகக் கோப்பை குறித்த தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளும் வலுவானவையே என்றாலும், டோனியின் தலைமையிலான இந்திய அணி மூன்றாம் முறையாக கோப்பையை வென்று, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா வரிசையில் இடம் பெறுவதையே தாம் விரும்புவதாக சச்சின் டெண்டுல்கர் பேட்டியளித்துள்ளார்.
2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் அடிலெய்டில் பிப்ரவரி 15-ம் தேதி மோதுகின்றன.
"ஆஸ்திரேலியாவில் நமது வீரர்கள் நன்கு விளையாடி அனுபவம் பெற்றுள்ளனர். ஆனால் நான் கவலைப்படுவது நியூசிலாந்து தட்ப வெப்ப நிலையை நினைத்துதான். 1992-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியின்போது டுனேடின் நகரில் நடந்த மேட்சில் எக்கச்சக்க குளிர் காரணமாக நாம் தோற்றுப் போனதை மறக்கமுடியாது," என நினைவு கூர்ந்தார் டெண்டுல்கர்.
ஆனால் 2014-ம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்வதால், போதிய அனுபவம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
2015 உலகக் கோப்பை போட்டியில் 49 மேட்சுகள் ஆடப்பட உள்ளன. 44 நாட்கள் நடக்கிறது இந்த கிரிக்கெட் திருவிழா.