தப்பு, பெரிய தப்பு... ஷேவாக், யுவராஜை சேர்க்காதது மிகப் பெரிய தவறு... சொல்கிறார் காதிர்!
டெல்லி: இந்திய அணியில் யுவராஜ் சிங், வீரேந்திர ஷேவாக் ஆகியோரைச் சேர்க்காமல் விட்டது மிகப் பெரிய தவறு என்று முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதிர் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் காதிர் பந்து வீச்சு என்றால் பேட்ஸ்மேன்களுக்கு கிலியாக இருக்கும். இவர் பந்து வீசுவதை விட, பந்தை வீச வரும்போது டான்ஸ் ஆடுவது போல ஒரு நடையைப் போடுவார் பாருங்க, அதுக்குத்தான் நிறைய ரசிகர்கள் இருந்தனர்.
மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இவரது காலத்தில்தான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் அறிமுகமானார். காதிர் பந்து வீச்சையும் பதம் பார்த்து அந்த சின்ன வயதிலேயே சிலாகிக்க வைத்தவர் சச்சின்.
இப்போது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் காதிர் (வயது 59). அதிலிருந்து சில....

தப்பு செய்வதே இவர்களுக்குப் பழக்கம்
ஆசிய அணிகள் எப்போதுமே மிகப் பெரிய தவறுகளை மிகச் சாதாரணமாக செய்கின்றன. அதுதான் எனக்கு புரியாத புதிராக உள்ளது.

ஷேவாக், யுவராஜ் இல்லாம எப்படி
ஷேவாக், யுவராஜ் போன்றவர்கள் அனுபவசாலிகள். திறமையான வீரர்கள். இவர்கள் இல்லாமல் எப்படி இந்திய அணி முழுமை பெறும் என்று தெரியவில்லை.

பிரஷர் கொடுத்திருக்கலாம்
இவர்கள் அணியில் இருந்திருந்தால், எதிரணிகளுக்கு நல்ல நெருக்கடியைக் கொடுக்க முடியும். அத்தோடு நான்கு ரெகுலர் பந்து வீச்சாளர்களை வைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும்.

பிரமாதமாக ஆடினார்களே
கடந்த 2011 உலகக் கோப்பைப் போட்டியின்போது ஷேவாக் முதல் போட்டியில் அபாரமாக சதம் போட்டார். யுவராஜ் சிங்கோ கடைசி வரை பிரமாதமாக ஆடினார். போட்டித் தொடர் முழுவதுமே அவர் சிறப்பாக பந்து வீசினார். தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

அமீத் மிஸ்ரா, பியூஸ் சாவ்லாவும் முக்கியம்
அதேபோல இந்திய அணியில் அமீத் மிஸ்ரா, பியூஸ் சாவ்லா ஆகியோரையும் சேர்த்திருக்கலாம். காரணம், இந்தியாவிடம் மிரட்டல் தரக் கூடிய வேகப் பந்து வீச்சாளர்கள் யாருமே இல்லை.

அரை இறுதிக்குள் ஒரு அணிக்கே வாய்ப்பு
அரை இறுதிப் போட்டிக்குள் ஒரே ஒரு ஆசிய அணி மட்டுமே நுழையும் என்பது எனது கணிப்பு. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்ற மூன்று அணிகளாக இருக்கும். இங்கிலாந்துக்கு வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன்.

இந்தியா - பாக் மோதல் சுவாரஸ்யமானது, முக்கியமானது
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி சுவாரஸ்யமானது மட்டுமல்லாமல், தொடரிலேயே முக்கியமானதாகவும் இருக்கும். இது இரு அணி வீரர்களுக்கும் நல்ல தெம்பைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். இறுதிப் போட்டிக்கு முந்தைய இறுதிப் போட்டியாக இது அமையும்.

யார் வேண்டுமானாலும் வெல்லலாம்
இதில் யார் வெல்வார் என்பதை இப்போதே கணிக்க முடியாது. இது புதிய போட்டி, புதிய தொடர், இரு அணிகளும் சமமான பலத்துடன் உள்ளனர். சேசிங் செய்யும் அணிக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும். இருப்பினும் டாஸ் வெல்பவர்களுக்கு சாதகம் அதிகம்.

டோணியால் மட்டும் முடியாது
டோணி மிகச் சிறந்த கேப்டனாக இருக்கலாம். ஆனால் அவரால் மட்டுமே கோப்பையை தக்க வைக்க முடியாது. ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். நடந்து முடிந்த முத்தரப்பு தொடரில் கோஹ்லியும், சுரேஷ் ரெய்னாவும் ஆட்டமிழந்த விதம் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்கள் இப்படி விளையாடக் கூடாது என்றார் காதிர்.


Click it and Unblock the Notifications