யுவராஜ் தேர்வு செய்யப்படாததற்கு "மெய்யாலுமே" டோணிதான் காரணமா?
டெல்லி: உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் இருக்கையில் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கேப்டன் டோணி மீது குற்றம் சாட்டி அந்த சந்தோஷத்தை கெடுத்துவிட்டார்.
ஐபிஎல் 8வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக ரூ.16 கோடிக்கு யுவராஜ் சிங்கை டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த ஏலம் முடிந்த கையோடு யுவராஜின் தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங் கேப்டன் டோணி மீது குற்றம் சாட்டியுள்ளார். அதாவது யுவராஜ் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறாததற்கு டோணி தான் காரணம் என்று யோக்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டோணி
டோணிக்கு என் மகனுடன் என்ன பிரச்சனை என்று தெரிய வேண்டும். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது கூட அணிக்காக விளையாடினார். டோணி தனது தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்தே உலகக் கோப்பை அணியில் என் மகன் பெயர் இடம்பெறாமல் செய்துவிட்டார். இருக்கட்டும் அவர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று வரட்டும் என்று யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

5 பேர் கொண்ட குழு
உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய வீரர்களை 5 பேர் கொண்ட குழு தான் தேர்வு செய்தது. அப்படி இருக்கையில் யோக்ராஜ் டோணி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

கேப்டன்
தேர்வு குழு வீரர்களை தேர்வு செய்யும் முன்பு அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் கலந்தாலோசிக்கும். இந்த விஷயத்தில் டோணியின் கருத்தை சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக் குழு நிச்சயம் கேட்டிருக்கும்.

யோக்ராஜ்
யுவராஜ் சிங்கின் தந்தை இப்படி டோணியை குற்றம் கூறுவது சரியா? அல்லது அவரது ஆதங்கமா? உண்மை வெளி வருவது மிகவும் கடினம்.

யுவராஜ்
உலகக் கோப்பை அணி அறிவிக்கும் முன்பு யுவராஜ் ஃபுல் ஃபார்மில் இருந்தார். அவர் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 3 சதம் அடித்திருந்தார். இந்நிலையில் உலகக் கோப்பை அணியில் அவர் பெயர் இடம் பெறாமல் போனதால் அவரது ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். மேலும் ஸ்டூவர்ட் பின்னியை தேர்வு செய்ததால் யுவராஜின் ரசிகர்கள் கொதிப்படைந்தனர்.

டுவென்ட்டி20
யுவராஜ் கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டுவென்ட்டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடியது தான் அவர் சர்வதேச அளவில் இந்தியாவுக்காக விளையாடியது. அன்றைய தினம் அவர் மோசமாக விளையாட ரசிகர்கள் அவரை விமர்சித்ததுடன் அவர் வீட்டின் மீது கற்கள் வீசித் தாக்கினர்.

அவ்வளவு தானா?
யுவராஜ் சிங் சர்வதேச அளவில் இனி விளையாட முடியாதா? அவர் ஏன் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது போன்ற கேள்விகள் பதில் அளிக்கப்படாமல் உள்ளன. இது கிரிக்கெட் லாஜிக்கா அல்லது ஒரு மனிதர் கூறியதை வைத்து நடக்கிறதா?


Click it and Unblock the Notifications