"என் 'கதை' முடியும் நேரம் இது".. சோகப் பாட்டு பாடும் யுவராஜ் சிங்!
டெல்லி: மறுபடியும் நான் இந்திய அணிக்காக ஆடுவேன் என்று நினைக்கவில்லை என்று சோகமாக கூறுகிறார் யுவராஜ் சிங்.
அதேசமயம், நான் எனது இடத்திற்காக போராடுவேன், விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இத்தனைக்கும் 2011 உலகக் கோப்பைப் போட்டியின்போது போட்டித் தொடர் நாயகன் பட்டத்தைப் பெற்றவர் யுவராஜ் சிங். இந்தியா உலகக் கோப்பையைப் பெற முக்கியப் பங்கு வகித்தவரும் கூட. ஆனால் 2015 உலகக் கோப்பைப் போட்டியில் இவர் இந்திய அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இடத்திற்காக யுவராஜ் சிங் கடுமையாக போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

எழுச்சிக்குப் பின் வீழ்ச்சி
2011 உலகக் கோப்பைத் தொடரில் யுவராஜ் சிங் பெரும் எழுச்சி கண்டிருந்தார். தொடர் நாயகன் விருதை வென்றார். அதிக ரன்களையும் குவித்தார். ஆனால் அதன் பின்னர் அவரது வீழ்ச்சி தொடங்கியது.

புற்றுநோயுடன் போராட்டம்
உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின்னர் யுவராஜ் சிங்குக்கு புற்றுநோய் தாக்கியது கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பினார். இருப்பினும் அவரால் முன்பு போல ஜொலிக்க முடியாமல் போய் விட்டது.

மீண்டும் விளையாட மாட்டேன்
தனது எதிர்காலம் குறித்து யுவராஜ் சிங் கூறுகையில், இந்தியாவுக்காக நான் மீண்டும் விளையாட முடியாமல் போகலாம். நான் அப்படித்தான் நினைக்கிறேன்.

விட்டுத் தர மாட்டேன்
ஆனால் நான் ஒரு பைட்டர். விட்டுத் தர மாட்டேன். முடிந்தவரை போராடுவேன். அந்த குணம் எனக்குள் இன்னும் உள்ளது என்றார் யுவராஜ் சிங்.

அதிரடி ரன் குவிப்பு
கடந்த உலகக் கோப்பைத் தொடரில் நான்கு அரை சதம், ஒரு சதம், 15 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார் யுவராஜ் சிங் என்பது நினைவிருக்கலாம்.

வாழ்க்கை மாறி விட்டது
யுவராஜ் மேலும் கூறுகையில், எனது வாழ்க்கை மாறிப் போய் விட்டது. உயர்வும் தாழ்வும் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு சுவாரஸ்யமான கதையும் கூட.

பாசிட்டிவாக இருக்க முயல்கிறேன்
எது எப்படி இருந்தாலும் நான் பாசிட்டிவாக இருக்க முயற்சிக்கிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாட முயற்சிக்கிறேன். அணியில் இடம் பிடிக்கவும் போராடுகிறேன்.

மீண்டும் விளையாட முடிந்தது அதிர்ஷ்டமே
புற்றுநோய்த் தாக்குதலிலிருந்து மீண்டு, மீண்டும் கிரிக்கெட் விளையாட முடிவதே அதிர்ஷ்டமான ஒன்றுதான். எனது திறமை முழுமையாகப் போய் விடவில்லை. எப்போதுமே நான் சிறந்ததைக் கொடுக்கவே முயன்றிருக்கிறேன். வாழ்க்கையில் எப்போதுமே பாசிட்டிவான சிந்தனையுடன் இருந்தால்தான் முன்னேற முடியும் என்றார் யுவராஜ்.

கடந்த 10 போட்டிகளில்
கடந்த 10 ஒரு நாள் போட்டிகளில் நான்கு போட்டிகளில் 72, ஆட்டமிழக்காமல் 77, 55 மற்றும் 60 ரன்களை எடுத்துள்ளார் யுவராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோவின் பரிதாபம்
கடந்த தொடரில் ஹீரோவாக திகழ்ந்தவருக்கு அடுத்த தொடரில் இடம் பிடிக்க போராடும் நிலை ஏற்பட்டிருப்பது பரிதாபம்தான்.


Click it and Unblock the Notifications