இஸ்லாமாபாத்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் தோல்விக்கு கிரிக்கெட் சூதாட்டம் காரணமாக கூறப்படுகிறது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கேப்டன் யூனுஸ் கான், பயிற்சியாளர் இப்திகார் ஆலம் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளது.தென் ஆப்ரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான் கோப்பை வெல்லும் என அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.ஆனால், வெற்றி பெற வேண்டிய பாகிஸ்தான், நியூசிலாந்து அணியிடம் எதிர்பாராத தோல்வியடைந்தது. போட்டியில் முக்கிய கட்டத்தில் நியூசிலாந்து வீரர் எலியாட் கொடுத்த எளிய கேட்ச்சை பாகிஸ்தான் கேப்டன் யூனுஸ் கான் கோட்டைவிட்டார். இதையடுத்து எலியாட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தார்.இந்நிலையில் தற்போது கிரிக்கெட் சூதாட்டம் காரணமாகவே யூனுஸ் வேண்டுமென்றே அந்த கேட்ச்சை தவறவிட்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும, இதில் பாகிஸ்தான் பயிற்சியாளர் இப்திகார் ஆலமுக்கு தொடர்புள்ளதாக தெரிகிறது.இதையடுத்து இவர்கள் இருவரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. மேலும் அந்த போட்டியின் ஒளிநாடா ஐசிசியின் ஊழல் ஒழிப்பு கமிட்டியின் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களது விசாரணைக்கு பின்னர் உண்மை நிலவரம் என்ன என்பது தெரிய வரும்.ஆனால், இந்த குற்றச்சாட்டை யூனுஸ் தரப்பு மறுத்துள்ளது. தனது கையில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாகவே பந்து நழுவியதாக அவர் கூறியுள்ளார். அதேபோல் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மோதிய லீக் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றதாகவும் புகார் வந்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றதன் காரணமாக தான் இந்தியா தொடரிலிருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.