தென்னாபிரிக்காவில்
தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரிக் இந்தியா மூன்று போட்டிகளில் ஆடியது. அந்த தொடரில் ஒரு இன்னிங்க்ஸ் கூட 400 ரன்களுக்கு மேல் இரண்டு அணிகளும் எடுக்கவில்லை. இரண்டு அணியும் ஆளுக்கு ஒரு முறை 300 ரன்களுக்கு மேல் எடுத்தனர். மற்றபடி, பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தோடு தான் இந்த போட்டி அமைந்தது. இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் 72 மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மூன்றாவது போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடரை 1-2 என இழந்தது.
இங்கிலாந்தில்
இங்கிலாந்தில் முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இரண்டாம் போட்டியில் படு மோசமாக இன்னிங்க்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று கடும் விமர்சனத்தை சந்தித்தது. அடுத்து மூன்றாம் போட்டியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் 60 மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா. தொடரை 1-4 என படு மோசமாக இழந்தது.
பேட்ஸ்மேன்கள் செய்தது என்ன?
இரண்டு தொடர்களிலும் அதிக ரன் குவித்தவர் கோலி தான். எதிரணி வீரர்கள் அவருக்கு அடுத்த இடத்தை நிரப்பினார்கள். தென்னாபிரிக்கா தொடரில் கோலிக்கு அடுத்த இடத்தை பிடித்த இந்தியர் பண்டியா தான். அவர் 119 ரன்கள் எடுத்தார். அதில் ஒரே இன்னிங்க்ஸில் 93 ரன்கள் எடுத்தார். மற்ற ஐந்து இன்னிங்க்ஸில் சொதப்பினார். முரளி விஜய் 102 எடுத்தார். ஆச்சரியமாக புவனேஸ்வர் குமார் 101 ரன்கள் எடுத்து இருந்தார். 3 போட்டிகளிலும் ஆடிய, மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களை விட இரண்டு போட்டிகளில் ஆடிய புவி அதிகம் எடுத்து இருந்தார். இங்கிலாந்திலும் அதே கதை தான். கோலி 593 ரன்கள் எடுத்துள்ளார். ராகுல் 299, புஜாரா 278 மட்டுமே எடுத்து மூன்று இங்கிலாந்து வீரர்களுக்கு பின்னே இருக்கிறார்கள்.
பந்துவீச்சாளர்கள் எப்படி?
இந்திய பந்துவீச்சு கடந்த காலத்தை விட இப்போது பலமடங்கு முன்னேறியுள்ளது என்பதே உண்மை. இங்கிலாந்து தொடரில் இஷாந்த் சர்மா 18, ஷமி 16, 3 போட்டிகளில் மட்டுமே ஆடிய பும்ரா 14 விக்கெட்கள் வீழ்த்தி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுடன் பட்டியலில் போட்டி போட்டு இடம் பிடித்துள்ளார்கள். தென்னாபிரிக்காவில் ஷமி 15 விக்கெட்கள் வீழ்த்தி, ரபாடா, பிலாண்டர் உடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். பும்ரா 14, 2 போட்டிகளில் ஆடிய புவி 10 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளனர்.
மீண்டும் நம்பர் 1?
டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஆறுதல் அளிக்கின்றனர். பேட்டிங்கில் கோலி மட்டுமே நன்றாக ஆடுகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் எப்போதாவது ஒரு போட்டியில் அடிப்பதும், தேவையான சமயங்களில் சொதப்புவதுமாக இருக்கின்றனர். உண்மையில் சொல்லப்போனால் இந்தியா பலம் குறைந்த இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்திய போது பெற்ற புள்ளிகளை வைத்தே முதல் இடத்தில் இன்னும் இருக்கிறது. அடுத்தும் வெஸ்ட் இண்டீஸ் உடன் தொடரில் ஆட உள்ளது. அதில் பெறும் வெற்றியை வைத்து மீண்டும் முதல் இடத்திலேயே தொடரலாம். ஆனால், பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி முதல் இடம் பெற்றால் தான் பெருமைப்பட முடியும்.