நாக்பூர்: நாக்பூரில் நடைபெற்ற ஹாங்காங் அணிக்கு எதிரான உலகக்கோப்பை டி20 தகுதிச்சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் நாக்பூர், தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த ஹாங்காங், ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய போதிலும் அந்த அணி 6 விக்கெட்டுக்கு 116 ரன்களே எடுத்தது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி 4 விக்கெட்டுகளை சாய்த்து முத்திரை பதித்தார்.
தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஷாசத் 41 ரன்களும் (40 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), நூர் அலி ஜட்ரன் 35 ரன்களும் (37 பந்து, 2 பவுண்டரி) எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு இது 2 ஆவது வெற்றியாகும். ஏற்கனவே ஸ்காட்லாந்தை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அதே சமயம் 2 ஆவது தோல்வி கண்ட ஹாங்காங் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
இந்த பிரிவில் கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் நாளை மோதுகின்றன. இதில் வெற்றி காணும் அணி இந்த பிரிவில் இருந்து சூப்பர் 10 சுற்றுக்குள் நுழையும். ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 119 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.