கோஹ்லியை மட்டம் தட்டிய பிளின்டாப் vs கொதித்தெழுந்த அமிதாப் பச்சன்! நேரடி வார்த்தை யுத்தம்
மும்பை: இங்கிலாந்தின் ஜோ ரூட் பெரிய வீரரா, அல்லது இந்தியாவின் கோஹ்லி திறமையான வீரரா என்பதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆன்ட்ரு பிளின்டாப்புக்கும், நடிகர் அமிதாப் பச்சனுக்கும் டிவிட்டரில் பெரும் மோதலே வெடித்தது.
உலக கோப்பை டி20 தொடரில் நேற்று, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பியது இந்தியா. கோஹ்லி அதிகபட்சமாக 82 ரன்களை குவித்து களத்தில் இருந்தார்.
அவரின் ஆட்டத்தை உலகின் பல பிரபலங்களும் புகழ்ந்து வருகிறார்கள். ஆனால் இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரு பிளின்டாப் கோஹ்லியை மட்டம் தட்டும் வகையில் டிவிட் போட்டிருந்தார்.

ஜோ ரூட்டுக்கு நிகர்
"கோஹ்லி இது போல் தொடர்ந்து விளையாடினால் ஒருநாள் ஜோ ரூட்டுக்கு நிகராக வந்துவிடுவார்" என்று ஒரு டிவிட்டில் குறிப்பிட்டு இருந்தார். ஜோ ரூட்டைவிட கோஹ்லி பெரிய வீரர் கிடையாது என்பது பிளின்டாப்பின் கருத்து.
ரூட்ட அப்ரூட் செய்வோம்
இந்த டிவிட்டை பார்த்த பாலிவுட் முன்னணி நடிகர், அமிதாப் பச்சனுக்கு கோபம் வந்துவிட்டது. "ஜோ ரூட்டா யாரது? ஒருவேளை இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சந்தித்தால் இந்தியா அவரை வேரோடு பிடுங்கிவிடும் (அப்ரூட்)" என்று, பிளின்டாப்பின் டிவிட்டர் பக்கத்தை இணைத்து, டிவிட் செய்தார்.
யாரது அமிதாப்பச்சன்
ஆனால், பிளின்டாப் விடுவதாக இல்லை. அமிதாப் பச்சனை சீண்டும் வகையில் பிளின்டாப், "மன்னிக்கவும், யார் இது? என்று அமிதாப் டிவிட்டுக்கு பதில் டிவிட் செய்தார்.
கோதாவில் குதித்த ரசிகர்கள்
இந்த டிவிட்டர் சண்டை ரசிகர்களை தூண்டிவிட்டுள்ளது. பிளின்டாப் டிவிட்டர் பக்கத்திற்கு சென்று அவரை வறுத்து வருகிறார்கள் இந்தி்ய கிரிக்கெட் மற்றும் பாலிவுட் ரசிகர்கள்.
அமிதாப் வாழ்த்து
முன்னதாக, அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘உங்கள் திறமை முடிவில்லாதது. நீங்கள் மிகப் பெரிய ஜீனியஸ். இன்றைய இரவுக்காக நன்றி. இது போல் பல இரவுகள் எங்களுக்கு கிடைக்கட்டும்" என்று கோஹ்லிக்கு வாழ்த்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications