டெல்லி: உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
உலக கோப்பை கிரிக்கெட், குரூப் 1 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இந்த பிரிவில் இருந்து அரை இறுதிக்கு நுழைய இங்கிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இதில் ஒன்றுதான் அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில், இங்கிலாந்து - இலங்கை அணிகள் சனிக்கிழமை இரவு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 4 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.
பின்னர் அந்த அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 42 பந்துகளில் 50 ரன்களையும், 15 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. இருப்பினும் இறுதியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பட்லர் 66, ராய் 42, ரூட் 25, மோர்கன் 22 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் வாந்தெர்சே 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனையடுத்து 172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், அந்த அணி 15 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது தடுமாறியது. இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் சிறப்பாக பந்து வீசி 4 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார், முடிவில் இலங்கை அணி 20 ஓவரின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் மட்டும் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக, அந்த அணி கேப்டன் ஏஞ்சலா மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்தார். வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது