மும்பை: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் நடுவே உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் முதலில் டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பவுலிங் செய்தது.
முதலில் பேட் செய்த இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. விராட் கோஹ்லி அதிகபட்சமாக 89 ரன்கள் விளாசினார்.

ஏற்கனவே இதே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக கெயில் சதம் அடித்திருந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் கெயில் புயல் வீசினால், இந்த ஸ்கோரெல்லாம் போதாது என்ற புலம்பல் ரசிகர்களிடம் எழுந்தது.
கடந்த சில நாட்களாகவே கெயில் சூறாவளியா, கெயில் புயலா என்ற கேள்விதான் ரசிகர்கள் மத்தியில் உலவி வந்தது. கோஹ்லி சூறாவளி சொன்னபடியே சுழன்று அடித்துவிட்டது. 47 பந்துகளில் கோஹ்லி 89 ரன்களை விளாசினார்.
இதையடுத்து கெயில் புயல் வீசுமோ என்ற அச்சத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. முதல் ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் விளாசிய கெயில், 2வது ஓவரின் முதல் பந்திலேயே பும்ரா பந்து வீச்சில் கிளீன் பௌல்ட் ஆகி நடையை கட்டினார்.
வான்கடே ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமல்ல டிவியில் கிரிக்கெட் பார்த்த ரசிகர்களுமே இதை பார்த்து ஆரவாரம் செய்தனர். இளம் வீரரான பும்ரா, அச்சமின்றி கெயில் புயலை கரையை கடக்க வைத்தது சிறப்பு.