டெல்லி: 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இன்று இந்தியா வருகை தர உள்ளது உறுதியாகி இருக்கிறது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இரு அணிகளும் மோதும் போட்டி வருகிற 19-ந் தேதி தர்மசாலாவில் நடக்கும்படி அட்டவணை தயாரிக்கப்பட்டது.

ஆனால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் நடத்த இருந்த போட்டி தொடர் ரத்ததானதால் உலக கோப்பையில் பங்கேற்பது குறித்து ஆலோசிப்பதாக பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது. அதன்பின் பாகிஸ்தான் அணி இந்தியா செல்ல அந்நாட்டு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் தர்மசாலா போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று அம்மாநில அரசு திடீரென அறிவித்தது. இதனால் புதிய சிக்கல் உருவானது. பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய இந்தியா வந்த பாகிஸ்தான் குழு அதிருப்தி தெரிவித்தது.
இதனால் தர்மசாலா போட்டி கொல்கத்தாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக எழுத்து பூர்வமாக இந்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
அதன்பின் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு புறப்படும் என்று பாகிஸ்தான் திடீர் நிபந்தனை விதித்தது. இதனால் இந்த விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் தூதரிடம் அந்நாட்டு வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. இதனை ஏற்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இந்தியாவுக்கு வர பாகிஸ்தான் அணிக்கு அனுமதி அளித்தது.