டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இருபது ஓவர் உலக கோப்பையின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி இன்று டெல்லியில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டகாரர் ஜெஸன் ராய் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜேம்ஸ் வின்ஸ் 22 ரன்கள் எடுத்து நபி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

3-வது வீரராக களமிறங்கிய இங்லாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 12 ரன்கள் எடுத்திருந்த போது ரன் ஆவுட் ஆகி வெளியேறினார். இதன் பிறகு களமிறங்கிய மோர்கன் (0), ஸ்டோக்ஸ் (6), பட்லர் (7) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
ஆனால் ஆல்ரவுண்டர் மொயின் அலியும், வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லேவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மொயின் அலி 41 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 142 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் முகமது ஷெசாத் 4 ரன்களில் அவுட் ஆகியது ஆப்கன் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அதேபோல் மற்றொரு தொடக்க வீரர் நூர் அலி 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியின் ஷபிக் இறுதி வரை போராடி ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து தனது அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஆட்டநாயகனாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி தேர்வு செய்யப்பட்டார்.