மொகாலி: இருபது ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து.
டி20 உலக கோப்பையின் இன்று மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மார்டின் கப்திலும், கேப்டன் வில்லியம்சனும் நியூசிலாந்துக்கு நல்ல தொடக்கம் தந்தனர்.

கப்தில் அதிரடி காட்ட வில்லியம்சன் நிதானமாக விளையாடினார். கப்தில் அதிரடியால் நியூசிலாந்து 6 ஓவர் முடிவில் 58 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய முன்ரோ, ஆண்டர்சன், ரோன்ஞ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நன்றாக விளையாடிக் கொண்டிருந்த கப்தில், முகம்மது சமி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 48 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். கப்தில் வெளியேறிய பிறகு நியூஸிலாந்தின் ரன்-வேகம் குறைந்தது.
பின்னர் கோரே ஆண்டர்சன் 21 ரன்களிலும், லூக் ரோஞ்சி 11 ரன்களிலும் வெளியேறினர். இறுதியில் ராஸ் டெய்லர் அதிரடி அடித்து ஆடி 36 ரன்கள் சேர்த்தார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் தரப்பில் சமி, அப்ரிதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசிலாந்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஷர்ஜில் கானும், அகமது ஷெஸாத்தும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 181 ரன்கள் எடுத்தால் என்ற கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல் 5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 61 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஷர்ஜில் கான் மில்னே பந்துவீச்சில் மார்டின் கப்திலிடம் 'கேட்ச்' ஆனார். அவர் 25 பந்துகளில் 47 ரன்களை விளாசினார். அதில் 9 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். லத்தீப் 3 ரன்னில் வெளியேறினார்.
இதனிடையே தொடக்க வீரர் அஹமது ஷெஸாத் 30 ரன்களில் அவுட் ஆனார். சிறிது நேரம் அதிரடி காட்டிய அப்ரிடி 9 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து பெவுலியன் திரும்பினார். நியூசிலாந்தின் அதிரடியான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணியினர் திணறினர்.
கடைசி 3 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு 44 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உமர் அக்மல் 24 ரன்களில் வெளியேறினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து, 22 ரன்களில் தோல்வியடைந்தது.
80 ரன்கள் குவித்த நியூஸிலாந்து அணியின் கப்தில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நியூசிலாந்து அணி தான் பங்கேற்ற 3 போட்டிகளிலிலும் வெற்றி பெற்று, குரூப்-2 லிருந்து முதலாவது அணியாக அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது.