கராச்சி: இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 தொடரில் பங்கேற்பதில் பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், அந்த அணி வீரர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று அச்சம் வெளியாகியுள்ளதால், பொதுவான நாடு ஒன்றில் அந்த அணி பங்கேற்கும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதிவரை, உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. தர்மசலாவில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளதாக நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அந்த அணி நிர்வாகம் ஐசிசியிடம் முறையிட்டுள்ளது. மேலும், இந்திய மண்ணில் விளையாட பாகிஸ்தான் அரசு, அனுமதியளிக்க வாய்ப்பில்லை என்றும், பாகிஸ்தான் அணி நிர்வாகம் ஐசிசியிடம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகர்யார் கான் கூறுகையில், சமீபத்தில் இந்தியாவில் கிரிக்கெட் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தானை சேர்ந்த அலீம்தார் பாதுகாப்பு காரணங்களால் பாதியிலேயே திருப்பி அனுப்பப்பட்டார். மும்பையில், சிவசேனை எதிர்ப்பால், பிசிசிஐ ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான மனப்பாங்கு இந்தியாவில் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் விளையாட உள்ள அனைத்து போட்டிகளையும், அரபு நாடுகளிலோ அல்லது கொழும்பிலோ நடத்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை, என்றார் அவர்.