மும்பை: உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மேற்கு இந்திய தீவுகள் அணி. சிம்மன்ஸ் அதிகபட்சமாக 83 ரன்கள் குவித்தார்.
இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணி நடுவே உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. முதலில் டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பவுலிங் செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. விராட் கோஹ்லி 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார். இதில் 1 சிக்சரும், 11 பவுண்டரிகளும் அடங்கும்.

ஏற்கனவே இதே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக கெயில் சதம் அடித்திருந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் கெயில் புயல் வீசும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து கிளீன் பௌல்ட் ஆகி நடையை கட்டினார்.
கெயில் புயல் கரையைக் கடந்து விட்டது என ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமல்ல டிவியில் கிரிக்கெட் பார்த்த ரசிகர்களுமே ஆரவாரம் செய்தனர். அடுத்து வந்த சிம்மன்ஸ் சூறாவளி வேகத்தில் இந்திய வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனிடையே அஸ்வின் வீசிய பந்தில் 18 ரன்களில் அவுட்டானார் சிம்மன்ஸ்.
அந்த பந்து வீசிய விதம் குறித்து சந்தேகமடைந்த நடுவர், மூன்றாவது நடுவரிடம் விசாரித்தார். 3-வது நடுவர் அதை நோ-பால் என அறிவிக்க தப்பி பிழைத்தார் சிம்மன்ஸ்.
இதையடுத்து பாண்ட்யா வீசிய 15-வது ஓவரிலும் மீண்டும் அவுட்டானார் சிம்மன்ஸ். இந்த முறையும் பாண்ட்யா பந்துவீசியது குறித்து மூன்றாவது நடுவரிடம் விசாரிக்க, அவர் நோ-பால் என அறிவித்தார். பாண்டியா வீசிய அந்த ஓவரில் மேற்கு இந்திய தீவுகள் அணி 18 ரன்களை குவித்தது.
இப்படி இரண்டு முறை லக்கால் தப்பித்து வந்த சிம்மன்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 82 ரன்கள் குவித்தார். அவர் 7 பவுண்டரிகளையும், 5 சிக்ஸர்களையும் விளாசினார்.
ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சிம்மன்ஸ்க்கு மும்பை வான்கடே கிரவுண்ட் பழக்கப்பட்ட ஒன்றுதான். அதனால் இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் அடித்து துவைத்தார் சிம்மன்ஸ்.