மும்பை: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் நடுவே உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. விராட் கோஹ்லி அதிகபட்சமாக 89 ரன்கள் விளாசினார்.
இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய 2வது அரையிறுதியில், டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் டேரன் சம்மி, பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.

ரோகித் ஷர்மாவும், ரஹானேவும் நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்த நிலையில் ரோகித் அவுட்டை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோஹ்லி, அடித்து ஆடிய விராட் கோஹ்லி 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் விளாசியது. கோஹ்லி 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார்.
கோஹ்லி இன்னிங்சில் 1 சிக்சரும், 11 பவுண்டரிகளும் கிடைத்தது. கோஹ்லி நடப்பு உலக கோப்பை தொடரில் மொத்தம் 5 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில் 273 ரன்களை குவித்துள்ளார். ரன் குவிப்பு சராசரி 136.5 ஆகும். ஸ்டைரைக் ரேட் 146.77.
இன்றைய போட்டியில் கோஹ்லி தனது முதல் 44 ரன்களை 31 பந்துகளில் விளாசிய நிலையில், அடுத்த 45 ரன்களை வெறும் 16 பந்துகளில் விளாசினார். அதாவது முதலில் அம்பியாக இருந்து, பிறகு அந்நியனாக மாறினார்.
டி20 போட்டியில் கோஹ்லியின் அதிகபட்ச ஸ்கோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவ்வாண்டு தொடக்கத்தில் விளாசப்பட்ட 90 நாட்-அவுட் ஆகும். இதற்கு அடுத்த அதிகபட்ச ரன் இன்று விளாசிய 89 ரன்களாகும்.
இதேபோல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 82 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 78 ரன்களும் கோஹ்லி விளாசி முத்திரை பதித்துள்ளார். கடந்த போட்டியில் அரை சதம் விளாசிய கோஹ்லி இப்போட்டியிலும் அரை சதம் கடந்து அசத்தியுள்ளார்.