கொல்கத்தா: இந்தியாவில் தங்களுக்கு நிறைய அன்பு கிடைக்கிறது என பேசி பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கிய அப்ரிதி, இன்று காய்ச்சல் எனக் கூறி பயிற்சிக்கு போகாமல் தவிர்த்துவிட்டார்.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை வங்கதேசத்தை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. மார்ச் 19-ந் தேதி இந்தியாவுடன் மோதுகிறது பாகிஸ்தான்.

இதற்காக கொல்கத்தா வந்துள்ளது பாகிஸ்தான் அணி. அந்த அணியின் கேப்டன் ஷாஹித் அப்ரிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் எங்களுக்கு பாகிஸ்தானைவிட நிறைய அன்பு கிடைக்கிறது எனக் கூறியிருந்தார்.
இது ஒன்று போதாதா? கொந்தளித்துவிட்டார்கள் பாகிஸ்தானியர்கள்... அப்ரிதி மீது கண்டனக் கணைகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன...சிலர் நீதிமன்றப் படிக்கட்டுகளேறியிருக்கின்றனர். இதனால் அப்ரிதி விளக்கம் கொடுத்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனிடையே இன்று பாகிஸ்தான் அணியினரின் பயிற்சிக்கு அப்ரிதி செல்லவில்லை. தமக்கு காய்ச்சல் இருப்பதாக கூறி பயிற்சியில் கலந்து கொள்ளலாலம் எஸ்கேப்பாகி இருக்கிறார் அப்ரிதி.
இது குறித்து பாகிஸ்தான் அணியின் மேலாளர் ஆலம் கூறுகையில், அப்ரிதிக்கு லேசான காய்ச்சல் இருக்கிறது. அதனால் அவரை சற்று ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறோம் என்றார்.