
வரலாற்று சாதனை
பாகிஸ்தானிடம் இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் (ஒரு நாள் மற்றும் டுவென்டி 20) இந்தியா தோல்வி அடைந்ததே இல்லை. அந்த வரலாறு இப்போதும் தொடர்கிறது.

5வது தொடர் வெற்றி
டி 20 உலகக் கோப்பைப் போட்டிகள் 2007 முதல் நடந்து வருகின்றன. அது முதல் இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானுடன் மோதிய போட்டிகளில் வென்றுள்ளது. நேற்று நடந்தது 5வது போட்டி. இந்த ஐந்து போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது.

ஒரு நாள் போட்டிகளில் 6
அதேபோல ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் மோதிய 6 போட்டிகளிலும் பாகிஸ்தானை இந்தியா புரட்டி எடுத்துள்ளது. ஆக மொத்தம் 11 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

டோணிதான் டாப்பு
இந்த 11 போட்டிகளில் 7 போட்டிகளில் டோணிதான் கேப்டனாக இருந்துள்ளார் என்பது இன்னொரு வரலாற்றுச் சாதனை. 3 போட்டிகளில் அஸாருதீன் கேப்டனாக இருந்தார். ஒரு போட்டிக்கு கங்குலி கேப்டனாக இருந்தார்.

மழையை வென்ற இந்தியா
இத்தனைக்கும் நேற்று போட்டி நடக்குமா என்பதே சந்தேகம் இருந்தது. அந்த அளவுக்கு மழை வெளுத்தது. ஆனால் அதையும் தாண்டி போட்டி நடந்தது. அதில் டாஸில் இந்தியா வென்றது. பின்னர் போட்டியையும் வென்று வரலாற்றில் இடம் பிடித்து விட்டது.

ஜாம்பவான்கள் முன்னிலையில்
நேற்றைய ஆட்டம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் ஜாம்பவான் வீரர்கள் முன்னிலைியல் நடந்தது. கவாஸ்கர், இம்ரான் கான், வாசிம் அக்ரம், சச்சின் டெண்டுல்கர், ஷேவாக் என முன்னாள் கேப்டன்கள் போட்டியைக் கண்டு ரசிததனர்.

கொடியாட்டி மகிழ்ந்த கவாஸ்கர் - சச்சின்
போட்டியில் இந்தியா வென்றதும் கவாஸ்கரும், சச்சினும் இந்திய தேசியக் கொடியை ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஈடன் கார்டன் மைதானமோ குஷியில் குதித்துக் குதூகலித்தது.

அத்தனை பேரையும் கட்டிப் போட்ட கோஹ்லி
நேற்றேய இந்திய பேட்டிங்கின்போது ரசிகர்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை., ஆரம்ப கட்ட வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்த விதம், பாகிஸ்தானின் பட்டையைக் கிளப்பிய பவுலிங், பவுலர் சமியின் அபாயகரமான பந்து வீச்சு ஆகியவை இந்திய ரசிகர்களை பீதிக்குள்ளாக்கியது. ஆனால் கோஹ்லி வந்ததும் அத்தனையும் மாறிப் போனது.

37 பந்துகளில் தக்க வைக்கப்பட்ட வரலாறு
சுருக்கமாக சொல்வது என்றால், கோஹ்லி சந்தித்த அந்த 37 பந்துகளில்தான் இந்தியாவின் உலகக் கோப்பை வரலாறு தக்க வைக்கப்பட்டது, தப்பிப் பிழைத்தது. அந்த 37 பந்துகளில் அவர் குவித்த 55 ரன்கள்தான் இந்திய ரசிகர்களை துள்ளி எழ வைத்தது.

நியூசிலாந்து தோல்வி கொடுத்த பாடம்
நியூசிலாந்திடம் முதல் போட்டியில் தோற்றது கோஹ்லிக்கு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால்தான் நேற்று பொறுப்புடன் ஆடினார். வெறியுடன் ஆடினார்.

சற்றே ஏமாற்றிய அஸ்வின்
நேற்று உண்மையில் அஸ்வினுக்கு ஏற்ற மாதிரியான பிட்ச்தான் இருந்தது. ஆனால் அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ரன்களை மட்டுமே கட்டுப்படுத்த முடிந்தது. அது ஒரு ஏமாற்றம்.

ரன் கலவரத்தில் இறங்கிய பாக். வீரர்கள்
கடைசி ஓவர்களில் இந்திய வீரர்கள் சரியாகத்தான் பந்து வீசினர். ஆனால் சோயப் மாலிக்கும், உமர் அக்மலும் அதில் புகுந்து விளையாடி விட்டனர். ரன்களை வாரிக் குவித்தனர். கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் பாகிஸ்தான் 51 ரன்களைக் குவித்தது.

பந்து வீச்சு ஓகேதான்
இவ்வளவு அதிரடியாக பாகிஸ்தான் ஆடியும் கூட இந்திய பவுலர்கள் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் துரத்தக் கூடிய அளவில்தான் பாகிஸ்தானின் ஸ்கோர் அமைந்திருந்தது.
மொத்தத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்றுதான் "கோஹ்லி" பண்டிகை.. !


Click it and Unblock the Notifications