இந்திய அணி 6வது கியரில், ச்சும்மா விர்ர்ர்ர்ன்னு போயிட்டிருக்கு: டோணி
கொல்கத்தா: இந்திய அணி தற்போது 6வது கியரில் பயணித்துக்கொண்டுள்ளது எனவும், டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணி முழு தகுதியோடு உள்ளதாகவும், அணி கேப்டன் டோணி நம்பிக்கை தெரிவித்தார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி நேற்று தாயகம் திரும்பிய நிலையில், கொல்கத்தாவில் இன்று நிருபர்களுக்கு கேப்டன் டோணி பேட்டியளித்தார்.
டோணி கூறியதாவது: கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசும் இரு பவுலர்கள் இந்திய அணிக்கு வாய்த்துள்ளனர். ஒருவர் நெஹ்ரா, மற்றொருவர் பும்ரா. இவ்விருவரும் இருப்பதால், எனக்கு பெரிய சுமை குறைந்தது போல உணருகிறேன்.

இறுதிகட்ட ஓவர்கள்
முன்பெல்லாம் 15 ஓவர்கள் ஆனாலே, கடைசி கட்ட ஓவர்களை வீச எந்த பவுலரை அழைக்கலாம் என்ற எண்ணம்தான் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். அன்றைய நாளில் யார் கொஞ்சம் சிறப்பாக பந்து வீசினார்களோ அவர்களை கடைசி கட்ட ஓவர்களில் பந்து வீச அழைப்பது எனது வழக்கம்.

டென்ஷன் இல்லை
இப்போது, ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே, கடைசி கட்ட ஓவர்களை யார் வீசப்போகிறார்கள் என்று முடிவெடுக்க முடிவதால், அதுகுறித்து யோசனை எனக்கு தேவையில்லை. நடுவரிசை ஓவர்களையும் சிறப்பாக வீச நம்மிடம் பவுலர்கள் இருக்கின்றனர். பவுலிங் யூனிட் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ளது.

நம்பிக்கை
ஆஸ்திரேலியா, இலங்கை, ஆசிய கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி, தன்னம்பிக்கையுடன் உள்ளது. எனவே, எங்களது முயற்சியில் எந்த மாற்றத்தையும் செய்து பார்க்க விரும்பவில்லை.

முதல் போட்டியும் முக்கியம்
உலக கோப்பை தொடரில் நாங்கள் முதல் போட்டியில் இருந்தே சிறப்பாக ஆட முயற்சி செய்வோம். பைனல் போட்டி பற்றி இப்போது யோசிக்க மாட்டோம். ஒவ்வொரு அணியுமே கோப்பையை வெல்ல தகுதியான அணிதான். எனவே ஜாக்கிரதையாகவே ஆடுவோம்.

6வது கியர்
இந்திய அணி தற்போது 6வது கியரில் பயணித்துக்கொண்டுள்ளது. முழு அளவிலான அணியாக உருமாறியுள்ளது. எனவே உலக கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு டோணி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications