லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடரில் முதல் இரண்டு சைக்கிளில் இறுதிப்போட்டியில் இந்திய அணி தகுதி பெற்றது. எனினும் மூன்றாவது சைக்கிளில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த தருணத்தில் 2025 -27 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி மற்றும் டிரா மூலம் இந்திய அணி நான்காவது இடத்தையும் பிடித்திருந்தது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த தொடரில் குறைந்தபட்சம் இந்திய அணி இரண்டு வெற்றிகளை பெற்றிருந்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது.

இந்த தருணத்தில் லண்டன் ஓவலில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி தற்போது முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.
பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 100% வெற்றி புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 66.67 வெற்றி சதவீதத்துடன் இலங்கை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது லண்டன் ஓவல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு 46.67 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஐந்தாவது டெஸ்டில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி தற்போது மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது.
இங்கிலாந்து தற்போது 43.33 வெற்றி சதவீதத்துடன் உள்ளது. ஐந்தாவது இடத்தில் வங்கதேச அணி 16.67 வெற்றி சதவீதத்துடன் உள்ளது. ஜீரோ வெற்றி சதவீதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறாவது இடத்தில் இருக்கின்றது. நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இன்னும் இந்த புதிய சைக்கிளில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனிடையே, இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் போட்டி அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.