மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான நிலையில் உள்ளது. ஒருவேளை மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியுமா? இல்லையா? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 164 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்து வருகிறது. 310 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு இணையாக ரன் குவிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தற்போது தென்னாப்பிரிக்கா முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த மூன்று அணிகளில் எந்த இரண்டு அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கின்றனவோ அந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலை உள்ளது.
ஒருவேளை இந்திய அணி மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, அடுத்து சிட்னியில் நடக்க உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினால் உறுதியாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும். நான்காவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 2 - 2 என சமனில் முடியும். அப்போது இந்திய அணியின் வெற்றி சதவீதம் 55.26 என்பதாக இருக்கும்.
அந்த சூழ்நிலையில், இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து இறுதி போட்டிக்கு முன்னேற வேண்டும் எனில் இலங்கை அல்லது பாகிஸ்தான் அணிகளின் வெற்றியை நாட வேண்டும். அதாவது ஆஸ்திரேலிய அணி 2025 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக ஆட உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சம் 1 - 0 என்ற அளவில் இலங்கையிடம் தோல்வி அடைய வேண்டும். அப்படி இல்லை எனில் பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவை 2 - 0 என்ற அளவில் தற்போது ஆடி வரும் டெஸ்ட் தொடரில் வீழ்த்த வேண்டும்.
மற்றொரு வாய்ப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் ஐந்தாவது ஐந்தாவது டெஸ்ட் போட்டிகள் இரண்டுமே டிராவில் முடிவடைகிறது என்று வைத்துக் கொண்டால் அப்போது தொடர் 1 - 1 என சமனில் முடிந்து இருக்கும். அப்போது 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டுமெனில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவை 2 - 0 என டெஸ்ட் தொடரில் வீழ்த்த வேண்டும். அத்துடன் இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஓடு போட்டியில் கூட ஆஸ்திரேலியாவை வெற்றி பெற விடக் கூடாது.
இவை அனைத்துமே கடினம் என்பதால் இந்திய அணி மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் வெல்வது மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்வதற்கான எளிதான வழியாகும்.