பிரிஸ்பேன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது தென்னாப்பிரிக்க அணி. கடந்த மாதம் வரை தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் முன்னிலை பெறவில்லை.
அப்போது இந்தியா முதல் இடத்தில் நீடித்து வந்தது. ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியின் வாய்ப்பு சிக்கலாக மாறியது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று உள்ளது.

அதே சமயம், தென்னாப்பிரிக்கா மிக எளிதாக இறுதிப் போட்டிக்கு முன்னேற உள்ளது. இரண்டாவது அணியாக ஆஸ்திரேலிய இறுதிப் போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது பற்றி முழுமையாக பார்க்கலாம். 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்னாப்பிரிக்க அணிக்கு பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. அந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும்.
தென்னாப்பிரிக்கா அணி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் அந்த அணி போட்டிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது. ஏதேனும், அதிசயம் நடந்து பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால் மட்டுமே இந்த நிலை மாறும். அப்போதும் கூட தென்னாப்பிரிக்காவுக்கு இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு முழுமையாக நீங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும், இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றால் ஆஸ்திரேலிய அணிக்கு 2025 உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வாய்ப்பு உறுதியாகி விடும்.
மீதமுள்ள நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளை வெல்வது என்பது ஆஸ்திரேலிய அணியால் எட்டக்கூடிய விஷயம் தான் என்பதால் அந்த அணி நம்பிக்கையுடன் உள்ளது. இந்தியாவுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மொத்தமாக மீதம் உள்ளன. அந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட உள்ள இந்திய அணி அதில் வெற்றி பெற்றால் மட்டுமே 100 சதவீதம் உறுதியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற முடியும்.
மாறாக ஒரு போட்டியில் வென்று, ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் அடுத்து இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் தோற்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதால் இந்திய அணி தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. எனவே, இந்திய அணிக்கு 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.