பெர்த்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா உட்பட எந்தெந்த அணிகள் முன்னேற வாய்ப்பு உள்ளது? என்பது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முக்கிய புள்ளி விவரத்தை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஐந்து அணிகள் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறது.
அந்த ஐந்து அணிகள் - இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா. இந்த ஐந்து அணிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் எத்தனை போட்டிகள் மீதம் உள்ளன? அந்த மீதமுள்ள போட்டிகள் அனைத்திலும் வென்றால் அதிகபட்சம் எத்தனை வெற்றி சதவீதத்தை பெற முடியும் என்ற புள்ளி விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி இந்திய அணிக்கு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் மீதம் உள்ளன. அந்த நான்கிலும் இந்திய அணி வென்றால் அதிகபட்சமாக 69.3 வெற்றி சதவீதத்தை பெறும்.
ஆஸ்திரேலியா அணிக்கு, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இலங்கை அணியுடன் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன. இந்த ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 71.05 என்ற வெற்றி சதவீதத்தை பெறும்.
இலங்கை அணி, தென்னாப்பிரிக்காவுடன் இரண்டு போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுடன் சொந்த மண்ணில் இரண்டு போட்டிகளிலும்விளையாட உள்ளது. இந்த நான்கு போட்டிகளில் இலங்கை வென்றால் 69.23.வெற்றி சதவீதத்தை பெறும்.
நியூசிலாந்து அணிக்கு, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொத்திகள் மீதம் உள்ளன. அந்த மூன்றிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 64.29 வெற்றி சதவீதத்தை பெறும்.
தென்னாப்பிரிக்காவுக்கு, இலங்கையுடன் இரண்டு போட்டிகளும், பாகிஸ்தான் அணியுடன் இரண்டு போட்டிகளும் உள்ளன. இந்த நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா அணி 69.44 வெற்றி சதவீதத்தை பெறும் என ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இது உத்தேச பட்டியல் மட்டுமே. இந்த ஐந்து அணிகளும் தங்களுக்கு மீதம் உள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றால் எத்தனை வெற்றி சதவீதம் பெறும் என்ற கணக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து அணிகளும் தங்களுக்குள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் மாற்றி, மாற்றி தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது.