மெல்போர்ன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டிக்கான இரண்டு இடங்களில் ஒரு இடத்தை தென்னாப்பிரிக்கா தட்டிச் சென்று இறுதிக்கு முன்னேறி உள்ளது.
மீதமுள்ள ஒரு இடத்தை பிடிப்பதற்கு இலங்கை அணிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. எனவே, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய மூன்று அணிகளில் ஒரு அணி மட்டுமே 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

மெல்போர்னில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி சென்று வரும் நிலையில் இலங்கை அணிக்கு இது ஜாக்பாட் வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தால் அதன் மூலம் இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மெல்போர்னில் நடைபெற்று வரும் போட்டியில் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 340 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணி இந்த இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு போட்டியை டிரா செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ராகுல் எனும் மூன்று முக்கிய விக்கெட்கள் வீழ்ந்த போதும் 65 ஓவர்கள் மட்டுமே மீதம் இருப்பதால் இந்தப் போட்டியை இந்திய அணி டிரா செய்ய வாய்ப்பு உள்ளது.
மெல்போர்ன் போட்டி மற்றும் சிட்னியில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தால் அதன் மூலம் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 53.51 என்பதாக சரியும். அதன் மூலம் இலங்கை அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்.
ஆஸ்திரேலிய அணியை இரண்டு போட்டிகளிலும் வீழ்த்துவது என்பது கடினம் என்றாலும் இலங்கை அணிக்கு அந்த சிறிய வாய்ப்பாவது கிடைக்கும். மறுபுறம், மெல்போர்ன் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால், சிட்னி போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இல்லையெனில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழக்க நேரிடும்.
இந்திய அணி மெல்போர்ன் போட்டியில் தோல்வி அடைந்து, சிட்னி போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்து இலங்கை அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை 1 - 0 என வெல்ல வேண்டும். அப்போது மட்டுமே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். எனவே, இந்திய அணி தான் இப்போது இக்கட்டான நிலையில் இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன. அந்த நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றால் போதும் என்ற நிலையில் உள்ளது.