பிரிஸ்பேன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்திலேயே நீடிக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததால் இந்த நிலை ஏற்பட்டது.
மூன்றவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்த்த இந்திய அணி மழையின் உதவியுடன் போட்டியை டிரா செய்தது. அதனால், இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் அடையுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்திய அணி 55.89 வெற்றி சதவீதத்தை மட்டும் பெற்று மூன்றாவது இடத்திலேயே நீடிக்கிறது.

ஆஸ்திரேலிய அணி 58.89 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் தென்னாப்பிரிக்கா அணி உள்ளது. அந்த அணி 63.3 வெற்றி சதவீதத்தை பெற்று உள்ளது. இந்திய அணிக்கு 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன.
ஒரு வேளை அடுத்து உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி மற்றும் ஒரு போட்டியை டிரா செய்தாலும் நிலைமை சிக்கல் ஆகிவிடும். அப்போது இலங்கை அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட உள்ள டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்படும். அப்போது தான் இந்திய அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.
ஒருவேளை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்தால் அப்போது இலங்கை அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது நடந்தால் மட்டுமே இந்திய அணியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.
இந்திய அணி அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அடுத்து விளையாட உள்ளது. அந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியால் முன்னேற முடியும்.