WTC- டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இந்திய அணிக்கு உதவிய இங்கிலாந்து.. நியூசிலாந்து வெளியேற்றம்
கிறைஸ்ட்சர்ச்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து பின்னடைவை சந்தித்து உள்ளது. அந்த அணியை வீழ்த்திய இங்கிலாந்து இந்திய அணிக்கு பெருமளவில் உதவி செய்துள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
ஆனால், அந்த இரண்டு இடங்களுக்கு ஐந்து அணிகள் முட்டி மோதி வந்ததால் இந்திய அணி முதல் இரண்டு இடங்களுக்குள் இடம் பெறுமா? என்ற கேள்வி உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா இலங்கை, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து அணிகளுக்கு இடையே இரண்டு இடங்களுக்காக போட்டி இருந்தது.

இந்தியா தற்போது ஆடி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் மொத்தமாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது. இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இருந்து நியூசிலாந்து அணி வெளியேறி இருக்கிறது. இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்து அணிக்கு இங்கிலாந்துடன் மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து அணிக்கு அனைத்து போட்டிகளும் முடிவடைகின்றன. தனது கடைசி இரண்டு போட்டிகளையும் நியூசிலாந்து அணி வென்றாலும் அதிகபட்சமாக 58 வெற்றி சதவீதத்தை மட்டுமே பெற முடியும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம் பிடிப்பதற்கு அந்த வெற்றி சதவீதம் போதாது என்பதால் நியூசிலாந்து இந்த இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இருந்து விலகி உள்ளது. தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது.
அந்த வகையில் இந்தியாவின் இறுதிப் போட்டி முயற்சிக்கு இங்கிலாந்து அணி மறைமுகமாக உதவி உள்ளது. இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications