சிட்னி: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா மிகப் பெரிய டெஸ்ட் சாதனையை செய்து இருக்கிறார். இதுவரை அவர் கேப்டனாக ஆடிய முதல் 9 டெஸ்ட் போட்டிகளில் எட்டு வெற்றிகளையும், ஒரு ட்ராவையும் பெற்றுக் கொடுத்து உள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணி டெம்பா பவுமாவின் கேப்டன்சியில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. உலக அளவில் முதல் 9 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற இரண்டாவது கேப்டன் என்ற சாதனையை அவர் செய்து இருக்கிறார். இந்த நிலையில் தான் தென்னாப்பிரிக்கா அணி, அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளது.

டெம்பா பவுமா கேப்டனாக ஒன்பது போட்டிகளில் 809 ரன்கள் சேர்த்து உள்ளார். அவரது பேட்டிங் சராசரி 57.78 என்பதாக உள்ளது. அவர் மூன்று சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்களை அடித்து இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா எப்போதும் ஆக்ரோஷமாக விளையாடும்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடுத்துள்ளார். அவர் பேசுகையில், "தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆன போட்டி எப்போதும் ஆக்ரோஷமான போட்டியாகவே இருக்கும். ஆஸ்திரேலியா எங்களுக்கு எதிராக கடினமாக விளையாடும். ஆனால், அவர்களை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். நிச்சயமாக டெஸ்ட் கிரிக்கெட் 100 சதவீதம் உயிர்போடு உள்ளது. இதுதான் நாங்கள் விளையாடி வருவதிலேயே சிறந்த கிரிக்கெட்டாக உள்ளது." என கூறி இருக்கிறார்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணிக்கு வெளிப்படையாக சவால் விடுத்துள்ளது. இதுவரை தோல்வியே சந்திக்காத கேப்டன் டெம்பா பவுமாவின் தென்னாப்பிரிக்க அணியை ஆஸ்திரேலியா வீழ்த்துமா? ஜூன் மாதம் நடைபெற உள்ள 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பார்க்கலாம்.