மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சைக்கிள் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு சைக்கிளிலுமே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், மூன்றாவது சைக்கிளிலும் இந்தியா பைனலுக்கு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.
முதல் முறையாக நியூசிலாந்தை எதிர்கொண்டு இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது பைனலில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இந்த நிலையில் தற்போது உள்ள புள்ளி பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. இன்னும் இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இதில் வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட், நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் சொந்த மண்ணில் நடைபெறுகிறது. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தற்போது இந்தியாவுக்கு எதிராக ஐசிசி தொடரை தவிர வேறு எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்த சூழலில் பாகிஸ்தான் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தொடருக்கு தகுதி பெற முடியுமா என்பதை தற்போது பார்க்கலாம். பாகிஸ்தான் அணி தற்போது தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் சொந்த மண்ணில் விளையாடும் பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. மீண்டும் பாகிஸ்தான் அணி தங்கள் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸை இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் அணி தற்போது இரண்டு வெற்றி மூன்று தோல்வி என 36.6 புள்ளி வெற்றி சதவீதத்துடன் ஆறாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி பைனலுக்கு செல்ல வேண்டுமென்றால் எஞ்சி உள்ள போட்டிகளில் 9 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் 77.38 வெற்றி சதவீதத்துடன் பாகிஸ்தான் அணி பைனலுக்கு செல்லும்.
ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரும் பாகிஸ்தானுக்கு மிகவும் சவாலாக இருக்கும். இதேபோன்று ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினாலும் அது பாகிஸ்தானுக்கு நன்மையை தரும். இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 2007 ஆம் ஆண்டு தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். இதனால் இருவரும் பைனலுக்கு சென்றால் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கு இடையே நடைபெறும்.