
நேரலையில் உரையாடல்
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள கேப்டன் விராட் கோலி, இன்ஸ்டாகிராம் நேரலை உள்ளிட்ட பல்வேறு நேரலை நிகழ்வுகளில் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் கனெக்டட் ஷோவிற்காக சிட்னி, லண்டன், சிங்கப்பூர், சென்னை, கோவா மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களுடன் உரையாடிய கோலி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

விடுமுறை இறுதியில் ஹோம்வொர்க்
குழந்தைகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய விராட் கோலி, தன்னுடைய பள்ளி நாட்களில், விடுமுறை தினங்களில் தினமும் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டுவிட்டு, பின்பு, விடுமுறையின் இறுதியில் அரக்க பரக்க ஹோம்வொர்க்கை செய்ததை நினைவு கூர்ந்தார். இதை தன்னால் மறக்க முடியாது என்றும் இதனால் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி
ஜனவரியில் இருந்து டிசம்பர் வரையில் தினந்தோறும் பள்ளியிலிருந்து நேரடியாக பயிற்சி வகுப்புகளுக்கு சென்றுவிட்டு, பின்னர் தன்னுடைய ஹோம்வொர்க்கை செய்யும் வழக்கத்தை பின்னர் அமைத்துக் கொண்டதாகவும் விராட் கூறியுள்ளார். வழக்கமாக பரிட்சை நேரங்களில் பயிற்சி வகுப்புகள் இருக்காது என்றும் ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றுவிடுவேன் என்றும் கோலி தெரிவித்துள்ளார்.

குறையும் மனபாரம்
இறுதிப்பரிட்சை முடிந்து வீட்டிற்கு வரும் அந்த நாளில் தான் மிகவும் அமைதியாக உணர்வேன் என்றும், அந்த நாளில் வீட்டிற்கு வரும் தான் தன்னுடைய பையை விட்டெறிந்துவிட்டு, நன்றாக ஒரு குளியல் போட்டுவிட்டு, குளிர்ச்சியான தரையில் படுத்துக் கொள்வேன் என்றும் விராட் கூறியுள்ளர். பள்ளிக்கு செல்லும் பெரிய பாரம் அந்த நாளில் குறையும் என்றும், அந்த உணர்வை தற்போதும் தன்னால் மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











